ரஜினிக்காக கதவைத் திறந்து வைத்துள்ள பாஜக.. வேறு ஏதாவது வந்துடப் போகுது.. சீமான் கிண்டல்!
பாஜக திறந்து வைத்து காத்து கிடக்கும் கதவு வழியாக ரஜினிக்குப் பதில் வேறு ஏதாவது நுழைந்து விடபோகுது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டலடித்துள்ளார்.
சென்னை: பாஜக திறந்துள்ள கதவு வழியாக ரஜினிக்கு பதில் வேறு ஏதாவது நுழைஞ்சிடபோகுது என்று சீமான் கிண்டல் செய்தார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மேலும் தமிழகத்துக்காக இதுவரை எந்த பிரச்சினைக்கும் ரஜினி குரல் கொடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி வருகிறார்.
இந்த நிலையில், சி.பா. ஆதித்தனார் நினைவு தினத்தையொட்டி எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அடமானம் வச்சாச்சு
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், பாஜகவிடம் தமிழக அரசு அடமானம் வைக்கப்பட்டுள்ளது. ரஜினிக்காக பாஜகவின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என்று அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
வேற ஏதாவது வந்துடப் போகுது
அவர்கள் திறந்து வைத்துள்ள கதவு வழியாக வேறு ஏதாவது வந்துட போகுது. ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் பாஜக வலிமை இழந்த கட்சியாகிவிட்டது.
ரஜினி பேச்சில் புதிதில்லை
சிஸ்டம் சிதைத்துள்ளது என்று ரஜினி கூறியிருப்பது புதிதல்ல, நாட்டின் ஒட்டுமொத்த அமைப்பே குலைந்துவிட்டது. தமிழகத்தில் மட்டுமல்ல நாட்டின் ஒட்டுமொத்த அடிப்படை அமைப்பே சிதைந்துள்ளது.
ஜனாதிபதி பதவிக்கு வாக்களிக்க முடியாதா
ஆட்சி மாற்றத்துக்கு வாக்களிக்க முடிந்தவர்களால் ஜனாதிபதி பதவிக்கு வாக்களிக்க முடியாதா? என்ன என்றார் சீமான். ரஜினிக்காக பாஜக கடுமையாக முயன்று வரும் நிலையில் சீமான் அவர்களை கடுமையாக கிண்டலடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.