கைது பீதி... சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் ஹைகோர்ட்டில் முன்ஜாமீன் மனு
அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான ரத்தினமும், ராமச்சந்திரனும் சென்னை ஹைகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி இன்று மனு தாக்கல் செய்தனர்.
சென்னை: அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான ரத்தினமும், ராமச்சந்திரனும் சென்னை ஹைகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி இன்று மனு தாக்கல் செய்தனர்.
சென்னை தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த டிசம்பர் 8-ம் தேதி வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து ரூ. 136 கோடி பணமும், 179 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ரூ.34 கோடி புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் அடங்கும்.
இதையடுத்து சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாசலு, ஆடிட்டரும், நண்பருமான பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், முத்துப்பேட்டை ராமச்சந்திரன் ஆகிய 5 பேரும் டிசம்பர் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஜாமன் கோரி சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இருவருக்கு மட்டும் ஜாமீன்
இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோருக்கு மட்டும் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மற்ற மூவருக்கும் ஜாமீன் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்த நீதிமன்ற காவல் கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சிறைக் காவலில் சேகர் ரெட்டி
அந்த வகையில் சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் சிறைக் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர் ஜாமீன் கேட்டு மீண்டும் சி.பி.ஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
நிபந்தனை ஜாமீன்
முக்கியமாக, அந்த மனுவில் தாங்கள் கைது செய்யப்பட்டு 88 நாள்கள் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து சி.பி.ஐ. நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
அமலாக்கத் துறை கைது
தினமும் காலை 10.30 மணிக்கு சிபிஐ சிறப்பு நீதிபதி முன்பு ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்றும் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கு 17-ஆம் தேதி ஜாமீன் கிடைத்தது. இந்நிலையில் சிபிஐ சிறப்பு நீதிபதி முன்பு கையெழுத்திட வந்த சேகர் ரெட்டி உள்ளிட்ட மூவரையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
முன்ஜாமீன்
இதனால் பீதியடைந்த சேகர் ரெட்டியின் கூட்டாளிகளும், முன்பு கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களுமான திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் முன்ஜாமீன் கோரி சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.