விசாரணைக்கு அழைத்து வந்தவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற எஸ்.ஐ. -ராமநாதபுரத்தில் பயங்கரம்
ராமநாதபுரம் அருகே உள்ளது எஸ்.சி. பட்டணம். இப்பகுதியைச் சேர்ந்தவர் சையத் முகம்மது. இவருக்கும், அந்த ஊரைச் சேர்ந்த இன்னொருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோட்டை காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது.
இதையடுத்து போலீஸார் சையத் முகம்மதுவை விசாரணைக்கு அழைத்துள்ளனர். அதை ஏற்று முகம்மது விசாரணைக்குப் போனார். இன்று மாலை 6 மணியளவில் சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் திடீரென காளிதாஸ், துப்பாக்கியை எடுத்து முகம்மதுவை சுட்டு விட்டார். இதில் குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் முகம்மது உயிரிழந்தார்.
அவர் கத்தியை எடுத்துக் குத்த வந்ததால்தான் சப் இன்ஸ்பெக்டர் சுட்டதாக போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள். இந்த சம்பவத்தால் ராமநாதபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.