ஒட்டுமொத்த தமிழர்களின் சந்தோஷத்தையும் பறித்து விட்ட சசிகலா!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பான சந்தோஷத்தில் இருந்து வந்த மக்களுக்கு சசிகலா செய்தி பெரும் அதிர்ச்சியாக அமைந்து விட்டது.
சென்னை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ஒட்டுமொத்த தமிழர்களையும் ஸ்தம்பிக்க வைத்து விட்டது சசிகலா முதல்வர் என்ற செய்தி. அத்தனை பேரும் பேரதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
சமூக வலைதளங்களில் போய்ப் பார்த்தால் அப்படி ஒரு ஆவேசத்தையும், எதிர்ப்புகளையும், சாபங்களையும் காண முடிகிறது. யாருமே சசிகலா முதல்வராவதை விரும்பவில்லை, ஏற்கவும் இல்லை.,
காலையிலிருந்து சமூக வலைதளங்களில் ஜல்லிக்கட்டு சந்தோஷம்தான் நிரம்பி வழிந்தது. ஆனால் சசிகலா முதல்வராவார் என்ற செய்தி வந்ததும் அப்படியே மக்கள் ஷாக்காகி விட்டனர். இதை மக்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூற முடியாது. ஆனால் ஏதாவது ஒரு வகையில் இது தவிர்க்கப்படலாம் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது உண்மை.
ஜல்லிக்கட்டு சந்தோஷம்
அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்தது. தமிழக மக்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழர்களும் இதை பூரிப்புடன் பார்த்து ரசித்தனர், நேரிலும், டிவியிலும், செய்திகள் மூலமாகவும்.
பீட்டாவைக் கேலி செய்தபடி
சமூக வலைதளங்களில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக கொந்தளித்த பூர்வா ஜோஷிபுராவுக்கு எதிராகவும், பீட்டாவுக்கு எதிராகவும் இன்று நிறைய போஸ்ட்டுகளைக் காண முடிந்தது. கூடவே இந்த சந்தோஷத்தை சசிகலா கெடுத்து விடுவாரோ என்ற அச்சத்தையும் வெளிப்படுத்தியபடி இருந்தனர் மக்கள்.
நினைத்தது நடந்து விட்டது
மக்கள் சந்தேகப்பட்டபடியே அதுவும் நடந்து விட்டதுதான் கொடுமையானதாக மாறி விட்டது. மக்கள் இதை எதிர்பார்த்திருந்தனர்தான். ஆனால் ஏதாவது நடக்கும், ஓ. பன்னீர் செல்வம் எதிர்ப்பு காட்டுவார், மோதல் வெடிக்கும், எப்படியாவது தடுக்கப்படும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் லேசாக இருந்தது. ஆனால் அது நிறைவேறாமல் போய் விட்டது.
ஜீரணிக்க முடியவில்லை
காமராஜர் முதல்வராக இருந்த இடத்தில், அண்ணா முதல்வராக இருந்த இடத்தில் சசிகலாவா என்பதுதான் மக்களின் கடும் கொந்தளிப்பாக உள்ளது. அத்தனை பேரும் என்னதான் நடக்குது என்ற கோபத்தில் உள்ளனர். அவர்களால் இந்த செய்தியை ஜீரணிக்க முடியவில்லை என்பதே சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருக்கும் பல பதிவுகளின் சாராம்சமாக உள்ளது.
தேர்தலில் காட்டுவோம்
அதேசமயம், சட்டப்படி இதை யாராலும் தடுக்க முடியாது. அதேசமயம், மக்களிடம் உள்ள ஒரே ஆயுதம் இடைத் தேர்தல்தான். 6 மாதத்திற்குள் சசிகலா இடைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆக வேண்டும். அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று பதிவுகள் போடப்படுவதையும் பார்க்க முடிகிறது. மொத்தத்தில் மக்கள் சசிகாலவை ஏற்கவில்லை. இதை எப்படி அதிமுகவும், சசிகலாவும் சமாளிக்கப் போகிறார்கள் என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.