மெரினாவில் உண்ணாவிரதம் இருந்த ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைதாகி விடுதலை
மெரீனாவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: மெரீனா காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருந்து கைது செய்யப்பட்ட எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் விடுதலை செய்யப்பட்டார். அவருடன் கைதான திமுக எம்எல்ஏக்களும் விடுவிக்கப்பட்டனர்.
சட்டசபையில் இருந்து தாக்கி வெளியேற்றப்பட்ட எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மெரீனாவில் காந்தி சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். உடனடியாக பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.
சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்டாலின் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்து விளக்கி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு பெரும்பான்மையை நிரூபித்தது செல்லாது என அறிவிக்கக் கோரினார்.
அவைக் காவலர்களின் தாக்குதலில் கிழிந்த சட்டசபையுடன் சட்டசபையில் இருந்து கிளம்பிய ஸ்டாலின், நேராக ஆளுநர் மாளிகை சென்றுவிட்டு காந்தி சிலைக்கு வந்தார். ஸ்டாலின் உண்ணாவிரதத்தை துவக்கியது அறிந்த ஏராளமான திமுகவினர் மெரீனாவில் குவிந்தனர்.
சென்னை முழுவதும் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. காந்தி சிலை முன்பு ஸ்டாலினுடன் துரைமுருகன் உள்ளிட்ட எம்எல்ஏக்களும் கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் 88 பேரை போலீசார் கைது செய்து மயிலாப்பூரில் உள்ள சாமுதாய நலக் கூடத்தில் தங்க வைத்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் விடுவிக்கப்பட்டனர்.