முதல்வராக ஆசைப்படுகிறார் ஸ்டாலின்... தம்பிதுரை குற்றச்சாட்டு!
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதல்வராக ஆசைப்படுவதாக தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதல்வராக ஆசைப்படுகிறார் என தம்பிதுரை தெரிவித்துள்ளார். அந்த ஆசையால் தான் தற்போதைய தமிழக அரசை குறைசொல்லி வருகிறார் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் அதிமுக எம்பியும், லோக் சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, முதல்வருடன் ஏன் மற்ற யாரும் செல்லவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தம்பிதுரை, தமிழக முதல்வர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரை சந்தித்ததாக கூறினார். முதல்வருடன் யாரும் சென்று பிரதமரை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.
ஜெ.படத்தை உடனே திறக்க வேண்டும்
ஜெயலலிதாவின் படத்தை தமிழக சட்டசபையில் உடனடியாக திறக்க வண்டும் என்றும் என்றும் அவர் வலியுறுத்தினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதாக கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
எந்த பிளவும் இல்லை
அதிமுகவின் இரு அணிகளும் எப்போது இணையும் என்ற கேள்விக்கு பதிலளித்த தம்பிதுரை, அதிமுக ஒரே அணியாகதான் உள்ளது என்றார். மேலும் எங்களுக்குள் எந்த பிளவும் இல்லை, நாங்கள் சகோதரர்களாக தான் உள்ளோம் என்றும் அவர் கூறினார்.
ஜெ.பிறந்தநாள் வாடிக்கை
ஜெயலலிதா பிறந்த நாளை ஆண்டு முழுவதும் கொண்டாடுவதுதான் எங்கள் வாடிக்கை என்று கூறிய தம்பிதுரை, அதேபோல் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறோம் என்றார். மேலும் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை யார் கொண்டாடினாலும் வரவேற்கத்தக்கதுதான் என்றும் அவர் கூறினார்.
முதல்வராக ஆசை
எடப்பாடி தலைமையிலான ஆட்சியை மக்கள் வரவேற்கிறார்கள் என்று கூறிய தம்பிதுரை முதல்வராக வேண்டுமென்ற ஆசையில் ஸ்டாலின் குறை சொல்கிறார் என்றார். ஸ்டாலின் கூறுவது போல் மக்கள் அதிமுக ஆட்சியை சகித்துக்கொண்டு இருக்கவில்லை வரவேற்றுக் கொண்டுதான் இருக்கின்றனர் என்றும் தம்பிதுரை கூறினார். எதிர்க்கட்சிகள் 5 ஆண்டுகள் ஆனாலும், 10 ஆண்டுகள் ஆனாலும் விரைவில் தேர்தல் வரும் என்றுதான் சொல்லிக்கொண்டிருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.