திருச்சியில் சசிகலா- இளவரசி ஆதரவாளர்கள் மோதல் முற்றுகிறது!
திருச்சியில் சசிகலா, இளவரசி ஆதரவாளர்களிடையிலான மோதல் முற்றி வருகிறதாம்.
திருச்சி: திருச்சியில் சசிகலா, இளவரசி ஆகியோரது ஆதரவாளர்களிடையே மோதல் முற்றி வருவதால் அங்கு விரைவில் மோதல் வெடிக்கும் என்று தெரிகிறது.
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அவரிடம் யார் நெருக்கமாக இருப்பது என்பது குறித்து சசிகலாவுக்கும் அவரது அண்ணியான இளவரசிக்கும் போட்டியும் சண்டையும் ஏற்படும் என கார்டனுக்கு நெருக்கமானவர்கள் கூறுவதுண்டு.
இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தலைமையை யார் ஏற்பது என்பதிலும் இருவருக்கும் போட்டி ஏற்பட்டதாம். தற்போது இது முற்றியுள்ளதாக சொல்கிறார்கள்.
திருச்சியில் அடிதடி
திருச்சியில் வைத்து இப்போது இந்த இரு பிரிவுக்கும் இடையே மோதலாகியுள்ளதாம். அங்கு சசிகலா தரப்பைச் சேர்ந்த மருத்துவர் சிவக்குமார், சசிகலாவின் அக்கா ஆகியோரின் வீடுகள் உள்ளன. இளவரசியின் சம்பந்தி கலியபெருமாள் வீடும் அங்கேயேதான் உள்ளது. இதனால் திருச்சி அரசியலில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட இருவரும் துடிக்கிறார்கள். திருச்சி எம்.பி. குமார் இளவரசி ஆதரவாளர் ஆவார்.
இளவரசியின் விசுவாசிகள் வசம்
இதைத்தொடர்ந்து உள்ளாட்சி பொறுப்புகள் உட்பட அனைத்தும் இளவரசியின் விசுவாசிகள் வசமானது. இதற்கான உதவிகளை எம்பி குமார் செய்து கொடுத்ததால் இளவரசியின் ஆதரவாளர்களும் குமாருக்கு ஆதரவாக இருந்தது வருகின்றனர்.
சசிகலாவுக்கு இளவரசி எதிர்ப்பு
இந்நிலையில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா அதிமுக தலைமையை ஏற்றதால் இளவரசி தரப்பு கடும் அதிருப்தி அடைந்தது. இதனால் இளவரசி ஆதரவாளர்கள் சசிகலா தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்த்து வருகின்றனர்.
சசி படத்தை மறைக்கும் இளவரசி குரூப்
குறிப்பாக சசிகலா படத்தை அவர்கள் எந்த நிகழ்ச்சியிலும் வெளிப்படுத்துவதேயில்லை என தெரிகிறது. ஜெயலலிதாவின் திடீர் மரணத்திற்கு பிறகு திருச்சியில் உள்ள அமைச்சர்கள் தாங்கள் தயார்படுத்தியிருந்த காலண்டர்களில் சசிகலா பட ஸ்டிக்கர்களை ஒட்டி கொடுத்தனர்.
சசிக்கு எதிராக போர்க்கொடி
ஆனால் எம்பி குமார் எதையும் மாற்றம் செய்யாமல் அப்படியே கொடுத்தார். சசிகலாவின் தலைமையில் நடக்கும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருப்பதன் மூலம் இளவரசி ஆதரவாளர்களும் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.