கரூர்,கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் சதமடித்த வெயில்- அனல் காற்றால் அச்சம்
தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்தி வருகிறது. கரூரில் அதிகபட்சமாக 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
சென்னை: அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே தமிழகத்தில் அனல் வறுத்தெடுத்து வருகிறது. கரூர், கோவை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று 100 டிகிரிக்கும் மேலாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. கரூர் நகரில் அதிகபட்சமாக 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
பருவமழை பொய்த்துப்போனதால் தமிழகம் முழுவதும் வறட்சி நீடிக்கிறது. நீர் நிலைகள் வறண்டு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடை காலம் போல வெப்பமும் சுட்டெரிப்பதால் அனல் காற்றுக்கு அஞ்சி மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெப்பம் அதிகரிப்பு
கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே தமிழகத்தின் பல பகுதியில் மக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் இன்று மக்களை வாட்டி வதைத்தது. இதில் அதிகபட்சமாக கரூரில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதனால் அங்கு மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
சதமடித்த வெயில்
கரூர் பரமத்தியில் 104 டிகிரி, வேலூர், கோவை, தருமபுரி உள்ளிட்ட நகரங்களில் 101 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. மதுரை, நெல்லை,திருச்சி உள்ளிட்ட நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.
சென்னை வெப்பம்
தலைநகர் சென்னையில் 93 டிகிரி வெப்பம் பதிவானது. தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 70 டிகிரி கொடைக்கானலில் பதிவாகியுள்ளது. அனல் காற்று வீசுவதால் மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது.
இயற்கை குளிர்பான கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இடியுடன் மழைக்கு வாய்ப்பு
தென் தமிழகத்தில் நாளை முதல் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆறுதல் செய்தி கூறியுள்ளது. வட தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் சென்னையில் மேக மூட்டமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வட மாநிலங்களில் 109 டிகிரி
வட மாநிலங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா 105 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. நாடுமுழுவதும் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.