எனது கையெழுத்தை சசி தரப்பு போலியாக போட்டுள்ளது.. ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல். பரபரப்பு புகார்
எனது கையெழுத்தை சசிகலா தரப்பு போலியாக போட்டுள்ளது என்று ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
ஊத்தங்கரை: நான் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கே போகவில்லை. ஆனால் நான் ஆதரவுக் கடிதம் கொடுத்ததாக போலியாக தெரிவித்துள்ளனர். எனது கையெழுத்தையும் போலியாக போட்டுள்ளனர் என்று ஊத்தங்கரை எம்.எல்.ஏ மனோரஞ்சிதம் கூறியுள்ளார்.
ஊத்தங்கரை அதிமுக பெண் எம்.எல்.ஏ மனோரஞ்சிதம். இவர் தற்போது முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக திரும்பியுள்ளார். இந்த நிலையில் ஊத்தங்கரையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கூறுகையில், அதிமுக தலைமைக் கழகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. ஆனால் அக்கூட்டத்திற்கு நான் போகவே இல்லை.
இருப்பினும் சசிகலா முதல்வராக ஆதரவு தெரிவிப்பதாக வெளியான பட்டியலில் எனது பெயரும் இடம் பெற்றுள்ளது. நான் கையெழுத்தே போடவில்லை. ஆனால நான் கையெழுத்துப் போட்டு லெட்டர் கொடுத்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் நான் கையெழுத்தும் போடவில்லை, அங்கு போகவும் இல்லை.
மக்கள் விருப்பமே என் விருப்பம். மக்கள் விருப்பத்திற்கேற்பவே நான் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன் என்றார் மனோரஞ்சிதம்.