ஜெயலலிதா மறைவு.. சொத்துக்குவிப்பு வழக்கில் இனி என்ன நடக்கும்?
டெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்துள்ள நிலையில், அவர் மீது சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கு நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, நடராஜன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் விடுதலை செய்ததை எதிர்த்து கர்நாடக அரசு, திமுக செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதா இறந்துள்ள நிலையில், இருவகையில் வழக்கு பயணிக்க கூடும். ஒருவேளை இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டால் அத்தோடு அந்த பிரச்சினை ஓயும். பெங்களூர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தால் அப்போது சட்டத்திற்கு வேலை வரும்.
ஜெயலலிதாவுக்கு தண்டனை கொடுக்க முடியாது என்றபோதிலும், சொத்துக்குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்ட அவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும். மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் சம்மந்தப்பட்ட பிற குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும்.