"இந்த" ஒரு விஷயத்தை மட்டும் நிறுத்துங்க.. ஈஸியாக பணக்காரன் ஆகலாம்! சொல்வது ஆனந்த் சீனிவாசன்
சென்னை: இந்த காலத்தில் பொதுமக்கள் பலரும் தங்களால் பணத்தைச் சேமிக்கவே முடிவதில்லை எனப் புலம்புவதைக் கேட்டிருப்போம். இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன், ஒரு விஷயத்தை கட்டாயமாகத் தவிர்த்தால் பொருளாதார ரீதியாக நாம் அடுத்த நிலைக்குச் செல்வோம் எனக் கூறியிருக்கிறார். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் பலருக்கும் 'பணம் எங்கே போகிறது?' என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. "சேமிக்கவே வழியில்லை" என்று புலம்புபவர்களுக்குப் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் சொல்லும் தீர்வு மிகவும் கசப்பானது, ஆனால் உண்மையானது. நம் பாக்கெட்டில் ஓட்டை போட்டு, நம்முடைய லட்சக் கணக்கான வருமானத்தை சத்தமில்லாமல் உறிஞ்சிக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் என்றால் அது 'புகை பிடித்தல்'!

புகைப்பிடித்தல்
புகை பிடிப்பதை நிறுத்தினால் ஆரோக்கியம் மேம்படும் என்பது பொதுவான செய்தி. அது உண்மையும் கூட.! ஆனால், அதை நிறுத்தினால் நீங்கள் ஒரு பணக்காரனாகவும் மாற முடியும் என்கிறது ஒரு பொருளாதார ஆய்வு. இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் மிக எளிதான விளக்கத்தைத் தனது யூடியூப் பக்கத்தில் கொடுத்திருக்கிறார்.
புகை பிடிப்பவர்கள் செய்யும் மிகப் பெரிய தவறை சுட்டிக்காட்டும் ஆனந்த் சீனிவாசன், "இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இந்த சர்வே முக்கியமாகச் சொல்வது பீடி குறித்துத் தான் சொல்கிறது. ஒருவன் தான் சம்பாதிக்கும் பணத்தில் அதிகபட்ச பணத்தைப் பீடிக்குத் தான் செலவிடுகிறான். 100 ரூபாய் அல்லது 150 ரூபாய் சம்பாதிப்பவன் ஒரு பீடி கட்டோ அல்லது இரண்டு பீடி கட்டோ வாங்கினால், அவனது வருமானத்தில் அவன் பீடிக்கு செலவிடும் தொகை என்பது மிக மிக அதிகம். சிலர் பில்டர் இல்லாத சிகரெட் குடிப்பார்கள். ஆனால், அதிக பேர் பீடியை தான் குடிப்பார்கள்.
என்ன செய்ய வேண்டும்
பீடிக்கு வரி குறைவு என்பதால் அதைத் தான் குடிப்பார்கள்.. பீடி என்பது குடிசைத் தொழில் போல அரசு அதற்கு மிகக் குறைந்த வரியே விதிக்கிறது. உண்மையாகவே அரசு புகையிலையைக் கட்டுப்படுத்த நினைத்தால், அதிக விலையுள்ள சிகரெட்டுகளை விட்டுவிட்டு, இந்த பீடி மற்றும் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வரும் விலை குறைந்த சிகரெட்டுகளை தான் உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.
ஏன் சிக்கல்
தினசரி 150 ரூபாய் ஒரு நாளைக்குச் சம்பாதிப்பவன் 18 ரூபாய் சிகரெட்டுகளை பிடிக்க மாட்டான்.. அவன் பீடியைத் தான் பிடிப்பான். இது நேரடியாக அவனது உடல்நலத்தைப் பாதிப்பதோடு, இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் கேன்சருக்கும் கொண்டு போய் விடுகிறது. உங்களால் சிகரெட்டை முழுமையாகக் கட்டுப்படுத்தவே முடியாது. அதுதான் இதில் உள்ள பிரச்சினை.. போதைப் பழக்கங்கள் மிகப் பெரிய சமூகப் பிரச்சனை என்றால், பொருளாதார ரீதியாக ஒரு மனிதனைப் பாதாளத்திற்குத் தள்ளுவது இந்த பீடி மற்றும் பில்டர் இல்லாத சிகரெட்டுகள் தான்.
1970களில் சிகரெட் பிடிப்பது ஆரோக்கியமானது என்று கூட தவறாக விளம்பரப்படுத்தி விற்றார்கள்.. ஆனால் இன்று புகையிலை எவ்வளவு ஆபத்தானது என்பது உலகிற்கே தெரியும். அந்தப் பீடிக்கோ அல்லது விலை குறைந்த சிகரெட்டுகளுக்கோ செலவு செய்யும் பணத்தை மக்கள் சேமித்து வைத்தால், அவர்களின் வாழ்க்கையில் ஒரு மாபெரும் மாற்றம் வரும்" எனத் தெரிவித்துள்ளார்.
ரொம்பவே நல்லது
அதாவது ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்கள் தங்கள் வருமானத்தில் கணிசமான தொகையைப் பீடி, சிகரெட்டிற்கு செலவிடுகிறார்கள். அந்த தொகையைச் சேமித்து வைத்தால் நிச்சயம் பொருளாதார ரீதியாக அடுத்த நிலைக்கு செல்லலாம். இதைச் செய்தால் உடனடியாக ஓவர்நைட்டில் பணக்காரன் என முடியும் என்றில்லை.. ஆனால், நிச்சயம் பொருளாதார ரீதியாக அடுத்த நிலைக்குப் போவீர்கள்.! கூடவே உடல்நிலை பாதிப்பும் அது சார்ந்த செலவுகளும் தடுக்கப்படும்!














Click it and Unblock the Notifications