பெங்களூர், ஹைதராபாத்.. ஐடி துறையால் அடுத்தடுத்து நடக்கும் பாதிப்பு.. என்னங்க இப்புடி சரியுது!
இந்தியாவில் வீட்டு விற்பனை சமீபகாலமாக மந்தமாகி வருவதற்கு முக்கிய காரணம், ஐடி துறையில் ஏற்பட்டுள்ள பணி நீக்கங்கள் மற்றும் புதிய பணியாளர்கள் நியமனத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை தான் என புள்ளி விபரங்களும் கூறுகிறது.
சாப்ட்வேர் ஊழியர்கள் அதிக அளவில் வீடு வாங்கும் ஹைதராபாத், புனே மற்றும் பெங்களூரு போன்ற ஐடி துறையின் முக்கிய நகரங்களில் இந்த தாக்கம் அதிகமாக எதிராலித்துள்ளது. ஊழியர்களின் வருமானத்தில் ஏற்பட்டுள்ள நிச்சயமின்மை, மக்கள் வீடு வாங்கும் முடிவை தாமதப்படுத்தியுள்ளனர்.

வீடு வாங்குவோர் ஐடி ஊழியர்கள் மட்டும் தானா என்ற கேள்வி வரலாம், நாட்டின் பெரும் நகரங்களில் மலிவான வீடுகள் பிரிவு அதாவது 40 -60 லட்சம் ரூபாய்க்கு அதிக மதிப்புடைய வீடுகளை வாங்குவது பெரும் பகுதியினர் ஐடி, டெக், டிஜிட்டல் சேவை துறையில் பணியாற்றுபவர்கள் தான். இப்படியிருக்கும் போது ஐடி துறை வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டால் ரியல் எஸ்டேட் துறை கடுமையாக பாதிக்கும்.
இந்த வருடத்தின் துவக்கத்தில் ஆடம்பர வீடுகளுக்கான டிமாண்ட் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இந்த பாதிப்பு ப்ரீமியம் வீடுகளிலும் எதிரொலித்துள்ளது.
நைட் ஃபிராங்க் இந்தியா வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவின் முக்கிய எட்டு நகரங்களில் 2026-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வீட்டு விற்பனை வருடாந்திர அடிப்படையில் 4 சதவீதம் குறைந்து 84,827 யூனிட்டுகளாக இருந்தது. புதிய வீட்டுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தும் எண்ணிக்கையும் 2 சதவீதம் குறைந்து 94,855 யூனிட்டுகளாகச் சுருங்கியது.
கொரோனா தொற்று காலத்திற்கு பிறகு கண்ட வலுவான வளர்ச்சிக்குப் பிறகு, இப்போது 2026ல் முதல் முறையாக ஒரு தேக்க நிலை இந்திய ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ளது. மேலும், விற்கப்படாமல் இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரித்து சுமார் 5.2 லட்சம் யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. NCR மற்றும் புனே ஆகிய பகுதிகளில் மக்கள் மத்தியில் வீடுகளுக்கான தேவை மிகவும் குறைந்துள்ளது.
ஐடி துறையை அதிகம் நம்பியிருக்கும் நகரங்களில் ரியல் எஸ்டேட் துறையில் பெரும் மந்தநிலை உருவாகியுள்ளது தெரிகிறது. புனே மற்றும் ஹைதராபாத் நகரங்களில் பெரும்பாலான வீடு வாங்குபவர்கள் மென்பொருள் பொறியாளர்கள் என்பதால், இந்த நகரங்களில் புது வீடுகளுக்கான தேவை தடாலடியாக குறைந்துள்ளது.
வேலை பாதுகாப்பின்மை மற்றும் சம்பள உயர்வில் மந்த நிலை இருப்பதால், நடுத்தர வருமானம் கொண்டவர்கள் வீடு வாங்கும் திட்டத்தை தள்ளிவைத்துள்ளனர். மறுபுறம், பெங்களூரு, சென்னை போன்ற நகரங்கள் ஐடி மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் இருப்பதால் ஒப்பீட்டளவில் நிலையான நிலையில் உள்ளது.
ஐடி துறையில் தொடரும் பணி நீக்கங்கள், உலகப் பொருளாதார நிச்சயமின்மை ஆகியவை இத்துறையினரை எச்சரிக்கையுடன் செயல்பட வைத்துள்ளன. சம்பளம் அதிகரிக்காத நிலையில் மாதத் தவணை செலுத்தும் அளவுக்கு நிதி நிலைமை இல்லாததால் பலர் தங்களது வீடு வாங்கும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். குறிப்பாக நடுத்தர வருமானப் பிரிவினர் இந்த தயக்கத்தை அதிகம் காட்டுகின்றனர்.
இதேவேளையில் ரியல் எஸ்டேட் நிபுணர்கள் இதை பெரிய நெருக்கடியாகப் பார்க்கவில்லை. உண்மையாக வீடு வாங்க விரும்புபவர்கள் மத்தியிலான தேவை இன்னும் இருப்பதாகவும், ஆனால் வேகம் மட்டுமே குறைந்துள்ளதாகவும் கூறுகின்றனர். ஹைதராபாத் போன்ற ஐடி சார்ந்த நகரங்களில் வரலாற்று ரீதியாக ஐடி வேலைகளே வீட்டு மார்க்கெட்டை இயக்கி வந்ததால், தற்போதைய பணி நியமன மந்தநிலை குறுகிய காலத்திற்கு மக்கள் மத்தியில் புதிய முதலீடுகள் தொடர்பாக தயக்கம் ஏற்படுத்தியுள்ளது. வாடகை வருமானமும் இந்த நகரங்களில் சற்று குறைந்துள்ளது.














Click it and Unblock the Notifications