வேற லெவலுக்கு பாய்ந்த சென்னை மெட்ரோ! "சென்டிரல், திருமங்கலம், கிண்டி.." இந்த 3 இடத்தை நோட் பண்ணுங்க
சென்னை: தலைநகர் சென்னையில் மெட்ரோவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சென்னை மெட்ரோ இப்போது மிகப் பெரிய சாதனையைப் படைத்துள்ளது.
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் டிராபிக் என்பது மிகப் பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது. வெளியே எங்குச் சென்றாலும் டிராபிக்கில் நின்றாக வேண்டிய சூழலே இருக்கிறது. பீக் ஹவர்களில் என்ன நிலை எனத் தனியாகச் சொல்லத் தேவையில்லை.

இதனால் டூ வீலர் அல்லது கார்களை எடுத்துக் கிளம்பினாலே சாலைகளில் கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டிய சூழலே நிலவுகிறது. டிராபிக்கை குறைக்கச் சென்னை மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சென்னை மெட்ரோ: குறிப்பாக பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் தலைநகர் சென்னையில் நீலம் மற்றும் பச்சை என்று இரு வழித்தடங்களில் மெட்ரோ இயக்கப்பட்டு வருகிறது.
விம்கோ நகர் முதல் சென்னை ஏர்போர்ட் வரை ஒரு வழித்தடத்திலும் சென்டிரல் முதல் பரங்கி மலை வரை மற்றொரு வழித்தடத்திலும் ரயில் சேவை இயங்கி வருகிறது. இது தவிர மாதவரம்- சிறுசேரி, பூந்தமல்லி- கலங்கரை விளக்கம், மாதவரம்- சோழிங்கநல்லூர் வழித்தடங்களிலும் மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது.
புது சாதனை: சென்னையில் ஆரம்பத்தில் மெட்ரோவுக்கு பயணிகளிடையே பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் இப்போது நிலைமை மாறிவிட்டது. சரியான நேரத்தில் வருவது, ஏசி பெட்டிகள் எனப் பல காரணங்களால் இப்போது பொதுமக்கள் அதிகம் மெட்ரோவை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இவை எல்லாம் சேர்த்தே சென்னையில் மெட்ரோவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் மெட்ரோ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இப்போது உச்சம் தொட்டு இருக்கிறது. கடந்த ஜூன் 23ஆம் தேதி இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகபட்சமாக 2,81,503 பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணித்துள்ளனர். ஸ்டேஷன் வாரியாக பார்க்கும் போது அதிகபட்சமாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 23,745 பயணிகள் மெட்ரோவை பயன்படுத்தியுள்ளனர். சென்னைக்கு அடுத்து திருமங்கலத்தில் 14,935 பேரும் கிண்டியில் 14,938 பேரும் மெட்ரோவை பயன்படுத்தியுள்ளனர்.

சென்னை மெட்ரோவில் ஒரே நாளில் இதற்கு முன்பு இத்தனை பயணிகள் பயணித்ததே இல்லை. கடந்த ஜன. மாதம் 13ஆம் தேதி அதிகபட்சமாக 2.65 பயணிகள் பயணித்திருந்த நிலையில், பிப். மாதம் 10ஆம் தேதி 2.61 லட்சம் பேரும், மார்ச் 10ஆம் தேதி 2.58 லட்சம் பேரும் பயணித்துள்ளனர். அதேபோல ஏப்ரல் 28ஆம் தேதி 2.68 லட்சம் பேரும் மே 24ஆம் தேதி 2.64 லட்சம் பேரும் மெட்ரோவில் பயணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை மெட்ரோ நிர்வாகம் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. செயலி அல்லது கார்டு மூலம் டிக்கெட் எடுத்தால் 20% தள்ளுபடி என்ற நடைமுறை இருக்கிறது. அதேபோல வாட்ஸ்அப் செயலியில் டிக்கெட் எடுக்கும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்குப் பயணிகள் மத்தியில் மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. மேலும், காப்ரேட் நிறுவனங்களுக்கு பல்க் புக்கிங், குறிப்பிட்ட பயணிகளுக்கு இலவச டிக்கெட் என பல நடவடிக்கைகளைச் சென்னை மெட்ரோ நிர்வாகம் எடுத்து வருகிறது.
தற்போது கட்டுமான பணிகள் நடந்து வரும் மாதவரம்- சிறுசேரி, பூந்தமல்லி- கலங்கரை விளக்கம், மாதவரம்- சோழிங்கநல்லூர் வழித்தடங்களில் கட்டுமானம் முழுமையாக நிறைவடைந்தால் வலுவான மெட்ரோ பொது போக்குவரத்தைக் கொண்ட நகரங்களில் ஒன்றாகச் சென்னை மாறும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.












Click it and Unblock the Notifications