வெயிட் பண்ணுங்க, நல்ல செய்தி வரும்! சிவி சண்முகம், டீம் ஆலோசனைக்கு பின் புதிர் வைத்த ஆர்பி உதயகுமார்
சென்னை: அதிமுகவில் மீண்டும் சலசலப்பு கிளம்பியது. ஏனெனில் சிவி சண்முகம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சுமார் 36 பேர் தனியாக ஆலோசனை நடத்தினர். சி விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். எடப்பாடி பழனிசாமி இல்லாமல் தனியாக ஆலோசனை நடைபெற்றதால், கூட்டத்தில் என்ன விவாதிக்கப்படுகிறது, தவெகவுக்கு ஆதரவு அளிக்கிறார்களா? என்ற கேள்வி எழுந்தது. இந்த சூழலில், கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், "பொறுமையாக இருங்கள்.. நல்ல செய்தி வரும்" என்று பதில் அளித்தது அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் நொடிக்கு நொடி பரபரப்பு அதிகரித்துகொண்டே செல்கிறது. தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை வென்ற விஜய்க்கு, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

அதிமுக - திமுக கூட்டணி பரபரப்பு
இதன் மூலம் விஜய்யின் தவெகவிற்கு பெரும்பான்மைக்கு தேவையான எண்கள் கிடைத்துள்ளன. தற்போதைய நிலவரப்படி 120 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தவெகவிற்கு கிடைத்துள்ளது. இந்த அரசியல் பரபரப்புக்கு நடுவே அதிமுகவில் பெரும் மீண்டும் குழப்பம் வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே புதுவையில் தங்கியிருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள், இன்று காலை சென்னை வந்தனர். சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கு பிறகு, புதிதாக ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள் என்று எடப்பாடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இதனால், கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் அதிமுக - திமுக கூட்டணி ஏற்படலாம் என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எடப்பாடியின் பதிவு அமைந்தது.
அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்படுமோ?
ஆனால், சிறிது நேரத்தில் அதிமுகவில் மீண்டும் சலசலப்பு கிளம்பியது. ஏனெனில் சிவி சண்முகம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சுமார் 36 பேர் தனியாக ஆலோசனை நடத்தினர். சி விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரும் லால்குடி தொகுதி எம்.எல்.ஏவுமான லீமா ரோஸும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
எடப்பாடி பழனிசாமி இல்லாமல் தனியாக ஆலோசனை நடைபெற்றதால், கூட்டத்தில் என்ன விவாதிக்கப்படுகிறது என்ற கேள்வி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய்யின் தவெகவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் பலமாக எழுந்தது. இதனால், மீண்டும் அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்படுமோ என்று ரத்தத்தின் ரத்தங்கள் உன்னிப்பாக கவனிக்க தொடங்கியுள்ளனர்.
நல்ல செய்தி வரும் - ஆர் பி உதயகுமார்
இந்த சூழலில்தான் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், "பொறுமையாக இருங்கள்.. நல்ல செய்தி வரும்" என்று கூறினார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் வலது கரம் போல இருப்பவர் ஆர்.பி உதயகுமார். முந்தைய சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்ற பொறுப்பையும் ஆர்.பி உதயகுமாருக்கு எடப்பாடி வழங்கியிருந்தார். அவரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றது அதிமுகவில் பெரும் பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.














Click it and Unblock the Notifications