தமிழ்நாட்டின் முதல்வராகும் விஜய்.. தமிழ் மக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.. எஸ்ஏசி சொன்ன வார்த்தை
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நாளை தமிழகத்தின் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், அவரது தந்தை சந்திரசேகர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவர் கூறுகையில், "விஜய்க்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், 'தமிழ் மக்களுக்காக அனைத்தையும் செய்' என்பதுதான்.. விஜய் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற்றுள்ளனர்" என்றார்.
தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதல்வராக நாளை பதவியேற்க உள்ளார். தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று தற்போது ஆட்சி அமைக்க உள்ளார். கடந்த 4 ஆம் தேதி தேர்தல் ரிசல்ட் வெளியான போதே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததும் தந்தை சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபாவை சந்தித்து ஆசி பெற்றார்.

இந்த நிலையில் பெரும்பான்மையை காட்டிய விஜய்யை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார் ஆளுநர் அர்லேகர். இதையடுத்து தமிழ்நாட்டின் முதல்வராக நாளை விஜய் பதவியேற்கிறார். இந்த சூழலில் விஜய்யின் தந்தை சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், விஜய்க்கு சில அறிவுரைகளை வழங்கினார்.
எஸ்.ஏ சந்திரசேகர் கூறுகையில், "விஜய்க்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், 'தமிழ் மக்களுக்காக அனைத்தையும் செய்' என்பதுதான்.. விஜய் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற்றுள்ளனர்" என்று கூறினார்.
தமிழகத்தின் முதல்வராக நாளை விஜய் பதவியேற்கும் நிலையில் தமிழகம் முழுக்க பட்டாசு வெடித்து தவெகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய அவர்கள், "முதல்வர் விஜய்.. முதல்வர் விஜய்" என கோஷம் எழுப்பி, விஷில் ஊதி உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தனர்..
234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டசபையில் 108 தவெக எம்எல்ஏக்கள் உட்பட கூட்டணி ஆதரவுடன் 121 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று விஜய் பெரும்பான்மையை கடந்துள்ளார். இதையடுத்து ஆளுநர் அர்லேகர், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 163வது அட்டவணையின் கீழ், சி. ஜோசப் விஜயை தமிழக முதலமைச்சராக நியமிக்கிறேன்," என்று உத்தரவு பிறப்பித்தார்.
விஜய் முதல்வராக நியமிக்கப்பட்ட செய்தி வெளியாகியதும் தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பொதுமக்கள் கூறுகையில், எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எப்போதும் விஜய்க்கு ஆதரவாக இருப்போம். அவர் மீது முழு நம்பிக்கை இருக்கிறது" என்றனர்.














Click it and Unblock the Notifications