டெல்லி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரத்தில் இருந்தே 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று புதிய உச்சமாக 2,75,306 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,50,57,767 பேராக உயர்ந்துள்ளது.
கொரோனாவிற்கு கொத்து கொத்தாக மரணமடைந்து வருகின்றனர். ஒரே நாளில் 1,625 பேர் கொரோனாவிற்கு மரணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 178,793 பேராக அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
நாடு முழுவதும் 1,29,48,848 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 19,30,126 பேராக அதிகரித்துள்ளது.
உலக அளவில் ஒருநாள் கொரோனா தொற்று பரவலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மொத்த எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாகவே 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். வட இந்தியாவில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனைகளில் இடமின்றியும், மருந்து தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா, பீகார், உத்திரபிரதேசம், கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.