திமுக தோல்வியால் உஷாரான அகிலேஷ் யாதவ்.. "இனி அவங்க வேண்டாம்.." எடுத்த மிக முக்கியமான முடிவு
லக்னோ: தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த இரு மாநில தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அகிலேஷ் யாதவ் தனது பிரச்சார திட்டத்தை மாற்றி இருக்கிறாராம். அடுத்தாண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் நடக்கும் நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு கடந்த 10 ஆண்டுகளாகவே யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜகவே இருக்கிறது. இந்த முறை எப்படியாவது பாஜகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என்பதில் அகிலேஷ் யாதவ் உறுதியாக இருக்கிறார். இதன் காரணமாகவே இப்போதே இறங்கி வேலை செய்து வருகிறார்.

ஐபேக்
இந்த தேர்தலை எதிர்கொள்ளப் பிரபல அரசியல் வியூக நிறுவனமான ஐ-பேக் உடன் எதிர்கொண்டு சமாஜ்வாதி தேர்தலைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய சமாஜ்வாதி முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வமாக இந்த தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை என்ற போதிலும், கடந்த சில மாதங்களாக நடந்து வந்த ஆலோசனைகள் இப்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது..
அகிலேஷ் யாதவ்
உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க-வை வீழ்த்தி அரியணையைப் பிடிக்கத் துடிக்கும் அகிலேஷ் யாதவ், தற்போது தனது வியூகங்களை மாற்றியமைத்துள்ளார். வெளியே உள்ள நிறுவனங்களை நம்புவதை விட, தனது சொந்தக் கட்சி இயந்திரத்தை வலுப்படுத்துவதே சிறந்தது என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார். இதற்கு முக்கியமான காரணமே தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் தான்.
தமிழகத்தில் ஐ-பேக் வியூகங்களை மீறி தமிழ்நாட்டில் விஜய்யின் எழுச்சியும், திமுகவின் தோல்வியும் சமாஜ்வாதி கட்சியை யோசிக்க வைத்துள்ளது. மேலும், மேற்கு வங்கத்தில் பல ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக இருந்த மம்தா பானர்ஜி, பாஜகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது ஐ-பேக் நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. இதன் காரணமாகவே அவசரம் வேண்டாம் என அகிலேஷ் முடிவெடுத்துள்ளாராம்.
முடிவை மாற்றினார்
மேலும், ஐ-பேக் நிறுவனம் எதிர்கொண்ட சட்டச் சிக்கல்களும் அகிலேஷின் முடிவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. நிலக்கரி கடத்தல் வழக்குடன் தொடர்புடைய பணமோசடி புகாரில், கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் அலுவலகம் மற்றும் அதன் இணை நிறுவனர் பிரதீக் ஜெயின் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. கொல்கத்தாவில் சோதனை நடந்து கொண்டிருந்த அதே நாளில், லக்னோவில் சமாஜ்வாதி கட்சித் தலைவர்களுக்கு ஐ-பேக் பிரதிநிதிகள் பிரசன்டேஷன் கொடுத்துக் கொண்டிருந்தனர். இந்த 'டைமிங்' கட்சித் தலைமையைப் பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.
வேண்டாம்
இதன் காணமாகவே வெளி நிறுவனம் வேண்டாம் என்று அகிலேஷ் முடிவெடுத்துள்ளாராம். இது இக்கட்டான நேரத்தில் பின்னடைவுகளை ஏற்படுத்தலாம் என அகிலேஷ் யாதவ் உணரத் தொடங்கியுள்ளார்.. வேலைவாய்ப்பின்மை, சாதிவாரி கணக்கெடுப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் விவசாயிகள் பிரச்சினை போன்ற விவகாரங்களை முன்வைத்து பாஜகவை நேரடியாக எதிர்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளைக் கொண்டு தேர்தல் களத்தை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே இப்போதைய கட்சியின் ஒருமித்த கருத்தாக உள்ளது.













Click it and Unblock the Notifications