சிறுநீரில் ரத்தம்.. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு வந்த கொடூர நோய்! வெளியான ஷாக் தகவல்!
டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தான் சமீப காலமாக புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்ததாக தெரிவித்திருக்கிறார். ஒரு வழக்கமான மருத்துவப் பரிசோதனையின் போது எதிர்பாராத விதமாக இது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்னரே இந்த விஷயம் தனக்கு தெரிந்ததாகவும், அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டதாகவும் கூறியிருக்கும் நெதன்யாகு, அப்போதே இதை தெரிவித்திருந்தால், ஈரான் போருடன் இது தொடர்புபடுத்தி பேசப்பட்டிருக்கும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து வெளியான மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "76 வயதான நெதன்யாகுவுக்கு ஆரம்பக்கட்ட புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. ஒரு வழக்கமான மருத்துவப் பரிசோதனையின் போது சிறிய அளவிலான கட்டி கண்டறியப்பட்டது. இதற்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது, தற்போது அவர் உடலில் நோய்க்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. இதனை ஹதாசா மருத்துவமனையின் புற்றுநோயியல் பிரிவு இயக்குநர் அஹரோன் போப்போவ்ட்சர் உறுதிப்படுத்தியுள்ளார்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் தகவலை வெளியிடுவதில் சுமார் இரண்டு மாதங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்கான காரணத்தை நெதன்யாகு தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கியுள்ளார். அதாவது, ஈரானுக்கு எதிரான போர் தீவிரமாக இருந்த சமயத்தில் இந்தத் தகவலை வெளியிட்டால், அது இஸ்ரேலுக்கு எதிராகப் தவறான பிரச்சாரங்களை உருவாக்கக்கூடும் என்பதால் ரகசியமாக வைத்திருந்ததாகக் கூறியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியபோது, நெதன்யாகு இறந்துவிட்டதாக AI மூலம் உருவாக்கப்பட்ட போலிப் படங்கள் ஈரானிய ஊடகங்களில் பரவின. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தற்போது இந்த உண்மை நிலையை அவர் அறிவித்துள்ளார்.
புரோஸ்டேட் புற்றுநோய் என்றால் என்ன?
ஆண்களுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய ஒரு வகை புற்றுநோய்தான் இது. ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் உள்ள 'புரோஸ்டேட்' என்ற சிறிய சுரப்பியில் ஏற்படுகிறது.
ஆண்களின் சிறுநீர்ப்பைக்கு கீழே மற்றும் மலக்குடலுக்கு முன்னால் இந்தச் சுரப்பி அமைந்துள்ளது. இது ஒரு அக்ரூட் பருப்பின் அளவில் இருக்கும். விந்தணுக்களுக்குத் தேவையான திரவத்தைச் சுரப்பதே இதன் முக்கிய பணி.
இந்தச் சுரப்பியில் உள்ள செல்கள் கட்டுப்பாடின்றி வளர்ந்து ஒரு கட்டியாக (Tumor) மாறும்போது அது புற்றுநோயாகக் கருதப்படுகிறது. மற்ற புற்றுநோய்களுடன் ஒப்பிடும்போது, புரோஸ்டேட் புற்றுநோய் மிகவும் மெதுவாக வளரக்கூடியது. இது ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால், 100% குணப்படுத்த வாய்ப்புள்ளது.
நெதன்யாகுவுக்கு ஆரம்பக்கட்ட பாதிப்பு என்பதால், அவருக்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் மூலம் உயர் ஆற்றல் கொண்ட கதிர்களைக் கொண்டு புற்றுநோய் செல்கள் அழிக்கப்படும். அறுவை சிகிச்சை இல்லாமலேயே இதைக் குணப்படுத்த முடியும் என்பதால் இது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications