கப்புன்னு பிடிங்க.. ஈரான் தலைவரை சந்திக்க அடித்துபிடித்து ஓடும் அமெரிக்க டீம், ஜேடி வேன்ஸ் மிஸ்ஸிங்!
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றுள்ளார். இந்த பயணம் இருதரப்பு உறவுகளை குறித்து ஆலோசனை செய்ய மட்டுமே என விளக்கம் கொடுக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா இதை வாய்ப்பாக பார்க்க துவங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரை ஏப்ரல் 25 சனிக்கிழமை பாகிஸ்தான் அனுப்ப உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. துணை அதிபர் ஜேடி வேன்ஸ் இந்த முறை வரவில்லை. இந்த பயணத்தில் எப்படியாவது ஈரானுடன் டீலிங் செய்து முடிக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்கா இந்த தீடீர் பயணத்தை மேற்கொண்டு உள்ளது.

அமெரிக்க குழுவின் இந்த திடீர் பயணம் ஈரானில் புது விவாதத்தை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே இந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்ட 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை அமெரிக்காவின் கடற்படை முடக்கத்தை நீக்காத காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜேடி வேன்ஸ் இல்லாமல் ஈரான் தலைவர்கள் அமெரிக்க குழுவை சந்திப்பார்களா?
பாகிஸ்தான் மூலம் மறைமுக பேச்சு?
ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாய் தெளிவாகக் கூறியுள்ளார்: "இந்த பயணத்தின்போது அமெரிக்க அரசு பிரதிநிதிகளுடன் நேரடி பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறாது." அராக்சி பாகிஸ்தான் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து, அமெரிக்கா தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மீடியேட்டர் முயற்சிகள் குறித்து ஆலோசிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் கருத்துகளை பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவுக்கு தெரிவிக்கப்படும் என்பதும் கூறப்பட்டுள்ளது.
ஈரான் போர் 57-வது நாள்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராகத் தொடங்கிய போர் இப்போது 57-வது நாளை எட்டியுள்ளது. ஹார்முஸ் நீரிணைப்பில் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் எண்ணெய் விநியோக அச்சுறுத்தல் ஆகியவை உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த சூழலில் ஈரான் பாகிஸ்தான், ஓமான் (மஸ்கட்) மற்றும் ரஷ்யா (மாஸ்கோ) உள்ளிட்ட நாடுகளுடன் ஈரான் தனது நட்புறவை மேம்படுத்தி வருகிறது.
அராக்சியின் பயணத்தின் நோக்கம்
அராக்சி தனது ட்விட்டர் பதிவில், "இஸ்லாமாபாத், மஸ்கட் மற்றும் மாஸ்கோவுக்கு சரியான நேரத்தில் பயணம் மேற்கொள்கிறேன். கூட்டணி நாடுகளுடன் இருதரப்பு விவகாரங்கள் மற்றும் பிராந்திய வளர்ச்சிகள் தொடர்பானது எனது பயணத்தின் நோக்கம்" என்று எழுதியுள்ளார். "நமது அண்டை நாடுகள் எங்களுக்கு முக்கியம்" என்றும் தனது டிவீட்டில் நேற்று இரவு செய்த பதிவில் தெரிவித்தார்.
மீடியேட்டர் முயற்சியில் பாகிஸ்தான் தீவிரம்
பாகிஸ்தான் தற்போது ஈரான்-அமெரிக்கா இடையேயான மீடியேட்டர் முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சி மூலம் பாகிஸ்தான் உலக நாடுகள் மத்தியில் தனது மதிப்பை உயர்த்த முயற்சி செய்து வருகிறது. ஏற்கனவே இதற்கான பலன் கிடைக்க துவங்கியுள்ளது, சவுதி 2 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியுதவி, டிரம்ப் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவிப்பது என பாகிஸ்தானின் கலர் மாற துவங்கியுள்ளது.
இந்த நிலையில் ஈரான் - அமெரிக்கா மத்தியிலான போரை நிறுத்தினால் பாகிஸ்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கும், இது வரலாற்றில் முக்கிய இடத்தை பெறும்.














Click it and Unblock the Notifications