டுபாக்கூர் விருதா? தேவையற்ற ஒரு சர்ச்சை!
அண்மையில் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவுக்குத் தங்கத்தாரகை என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது வழங்கியஅமைப்பு ஐ.நா ஆலோசனை அமைப்பான சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்புக்குழு என்று கூறப்படுகிறது. இது ஐ.நா சபையின்அதிகாரப்பூர்வமான ஆலோசனை அமைப்பு இல்லை என்றும், இது ஒரு தொண்டு நிறுவனம் என்றும், உக்ரைன் நாட்டில் பதிவுசெய்யப்பட்ட இதற்கு, சென்னை அண்ணாநகரில் ஒரு பாதிரியார் பேராளராக இருக்கிறார் என்றும், அவர்தான் இவ்விருதுக்குஏற்பாடு செய்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
ஆனால், பொன்னையன் போன்ற அமைச்சர்களோ ஐ.நா சபையே முதல்வரின் சாதனைகளைப் பாராட்டி விருது வழங்குவது போலஅறிக்கைகளும் அறிவிப்புகளும் வெளியிட்டுத் தூள்கிளப்பி மிகுந்த பரபரப்பைக் கிளப்பிவிட்டனர். நல்லவேளை ஐ.நா சபையின்பொதுச்செயலாளர் திரு.கோபி அன்னான் அவர்களே நேரடியாக வந்து புரட்சித் தலைவிக்கு விருது வழங்கிச் சிறப்பிக்க இருந்தார்.ஆனால் ஈராக் மற்றும் இஸ்ரேல் பிரச்சனை நிமித்தமாக அவரால் இங்கு வர இயலவில்லை. அதற்காக அவர் வருத்தம்தெரிவித்துப் புரட்சித் தலைவிக்குக் கடிதம் எழுதியுள்ளார் என்று கூறாமல் விட்டார்களே! அதுவரை நாம் தப்பித்தோம். ஆனால்உண்மையில், விருது வழங்கிய விழாவில், ஐ.நா சபையின் சார்பாக எந்த ஒரு நேரடி உறுப்பினரும் கலந்துகொள்ளவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இது ஒரு டுபாக்கூர் விருது என்று திமுக சார்பில் விளக்கமாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இவ்விருதுபற்றி, பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் விதவிதமான அறிக்கைகளை வெளியிட்டு பலவிதமான கருத்துகளைத்தெரிவித்துள்ளன. வாதப் பிரதிவாதங்கள் அனல் பறந்தன. தேவையில்லாமல் ஒரு சிறு பொறியை ஊதி, ஊதிப் பெரிதாக்கிவிட்டனர்.
எது எப்படியோ இவ்விருது ஒரு மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது என்பது மட்டும் உண்மை. தற்போது திடீரென்று இவ்விருதுக்குஎன்ன அவசியம் ஏற்பட்டது?
இம்மாதிரியான விருதுகளுக்கு நதி மூலம் ரிஷிமூலம் பார்க்கக்கூடாது. அரசியலில் செல்வாக்குக் குறைந்து இறங்குமுகமாக உள்ளசூழ்நிலையில் இம்மாதிரியான விருதுகளும், பாராட்டு விழாக்களும் அரசியல் தலைவர்களுக்குத் தேவைப்படும். இதில் யாரும்விதிவிலக்கல்ல.
இந்தியாவிலேயே மோசமான முதல்வர் நம் தமிழக முதல்வர்தான் என்று தகவல் ஊடகங்கள் தொடர்ந்து கருத்துக் கணிப்புவெளியிடுகின்றன. அண்மையில்கூட இந்தியா டூடே இதழில் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் பீகார் முதல்வர் ராப்பரித்தேவியை விடமோசமாகக் கடைசி இடத்தில் நமது முதல்வர் பட்டியலில் இருந்தார். அப்படிப்பார்த்தால் ராப்ரித்தேவிக்குத்தான் தங்கத்தாரகைவிருது வழங்கியிருக்க வேண்டும். ஒரு வேளை பீகாரில் ஏதாவது ஒரு அமைப்பு அந்த அம்மையாருக்கு வைரத்தாரகை விருதுக்குக்கஜகஸ்தானில் உள்ள ஒரு அமைப்புக்குப் பரிந்துரைத்துள்ளதோ என்னவோ!
அரசியலில் இறங்குமுகத்தில் உள்ள முதல்வர் ஜெ அவர்கள் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் வருவதற்குள் ஏதாவது செய்துஇழந்துவரும் மக்கள் செல்வாக்கைத் தூக்கி நிறுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளில் இதுவும் ஒன்று அவ்வளவுதான். இதுபோன்ற முயற்சிகள் தேர்தல் வரை தொடரும். விருதுகளும் பாராட்டுவிழாக்களும் வந்துகொண்டே இருக்கும். அடுத்ததாக,தற்போது திரைப்பட உலகம் கிளம்பியுள்ளது. முதல்வர் ஜெ அவர்களை, கோடம்பாக்கத்துக் குத்துவிளக்கு என்று புகழத்தொடங்கியுள்ளனர். விரைவில் விழாவும் வந்துவிடும். ஆங்கங்கே இருக்கின்ற ஆதரவாளர்களைக் கொண்டு இம்மாதிரி விழாக்கள்எடுப்பதும் விருதுகள் வழங்குவதும் அரசியலில் ஒன்றும் புதிதல்ல. எனவே யாரும் தேவையற்ற சர்ச்சைகளில் ஈடுபட்டு,காலவிரயம் செய்துகொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை!
- அக்னிப்புத்திரன் ([email protected])
இவரது முந்தைய படைப்பு:
1.வேகமா? விவேகமா?
2.எட்டாத பழத்துக்குக் கொட்டாவி!
3.ஞானி!
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.