For Daily Alerts
Just In
'கல்லூரி'- நிழலும் நிஜமும்
-ஜெஸிலா
சமீபத்துல வந்த படங்களில் சில படங்கள் ரொம்ப நல்லாயிருக்குன்னு பலர் சொல்லி கேட்கும் போது பார்த்தே தீர வேணும்னு ஆச வருது. எங்க ஊருல பெரிய பிரபலங்கள் நடிச்சாத்தான் படமே திரைக்கு வருது. இந்த வாரம் 'ஒன்பது ரூபாய் நோட்டு' வரும்னு எதிர்பார்த்து ஏமார்ந்தோம். ஒரு வழியா கல்லூரி படம் பார்க்கும் வாய்ப்பு கிடைச்சுது.
'கல்லூரி' படத்துல யாரு நடிச்சிருக்காங்கன்னு கேட்டுறாதீங்க சத்தியமா எனக்கு தெரியாது. ஒரு முகம் கூட தெரிஞ்ச முகம் கிடையாது. இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு அசாத்திய தைரியம்தான் சொல்லலாம். அதுவும் பார்க்குறா மாதிரியான 'பாய்ஸ்' படத்துல வர மாதிரியான அழகழகான மூஞ்சிங்கக்கூட கிடையாது, ஆனா யார் நடிப்புக்கும் பஞ்சமே இல்ல.
கதாநாயகன் கதாநாயகி மட்டுமல்ல எல்லா கதாபாத்திரங்களும் நம்ம நட்பு வட்டத்துக்குள்ள வந்த உணர்வை ஏற்படுத்திடுறாங்க. படத்தை பார்க்கும் போது 'ஞாபகம் வருதே'ன்னு பாட தோணுது. கதாநாயகன் பாவம் கொஞ்சம் நடிக்க சிரமப்பட்டிருப்பார் போல தெரியுது. இயக்குனருக்கு பெண்ட் கழண்டிருக்கும்.
கயல் கதாபாத்திரம் தான் கதாநாயகியவிட மனசுல நிற்கிறாப்புல இருக்கு. ரொம்ப யதார்த்தமான காட்சியமைப்புகள் இருந்தாலும் நிறைய தேவையில்லாத சொருகுதலும், கூடவே சில ஓட்டைகளும். ஏதோ நிறைய சொல்ல வந்ததை அப்படியே விட்டுட்டா மாதிரி இருக்கு படம். ஒவ்வொரும் மாணவருடைய நிலைப்பாடையும் ஆழமா காட்டாம லேசா கொண்டு போயிருக்காங்க.
ஒரு மாணவி சலீமாவின் அப்பாவுக்கு நெஞ்சுவலின்னு சொன்னதும் மொத்த மாணவர்களும் தம் தகப்பனுக்கு நேர்ந்தது போல முகத்தை வைச்சுக்கிறவங்க, அதே அப்பா இறந்த காட்சிய கனமில்லாம காட்டியிருக்காங்க. அப்பா இறந்தாலும் பரீட்சை எழுத போகிறாள் சரி, அந்த மனநிலையில் பரீட்சை எழுதுவதை சர்வசாதாரண விஷயமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கு, அதக்கூட விட்டுடலாம் ஆனா அந்த காட்சிக்கு அடுத்த காட்சியே பரீட்சை அறையிலிருந்து வெளியில் வந்த பிறகு கதாநாயகிக்கு வந்த வாழ்த்து அட்டையை பார்த்து சிரிப்பது போல காட்சியமைப்பு.
அப்பா இறந்தது மறுநாளே சொந்த மகள் உட்பட அடுத்த நாளே கல்லூரியில் சிரித்துக் கொண்டிருப்பது ஏதோ நாடகம் போல ஒட்டாம இருக்கு. மெல்லிய நகைச்சுவைக்கு குறைவே இல்லை. 'டாடி'ன்னு ஒவ்வொருத்தர் வீட்டிலேயும் அழைப்பதா நினைத்து பார்க்கும் காட்சி அருமை. நகைச்சுவைக்காக இரண்டு மாணவர்கள் தோன்றும்போதெல்லாம் சிரிப்பு தன்னால வந்திடுது.
மத்தப் படங்கள் மாதிரி 'டூயட்' கண்றாவியெல்லாமில்ல. இசை ஜோஷ்வா ஸ்ரீதர்தான் இந்த படத்துல. பின்னணியோசையில் சில பாடல்கள், காதல் காட்சிகளில் பழகிய இளையராஜாவின் ஒலி கீதங்கள். அம்மன் கோயில் கிழக்காலே படத்தில் வரும் 'உன் பார்வையில் ஓராயிரம்' நல்ல வேளையாக 'ரீமிக்ஸ்' சமாச்சாரமெல்லாமில்லாமல் தப்பித்து அப்படியே ஒலிப்பது நேர்த்தியா இருக்கு.
கல்லூரியை பின்னணியா வைச்சு நிறைய படங்கள் வந்திருக்கு ஆனா அதையெல்லாம்விட்டு தனித்துக் காட்டவோ அல்லது பாலாஜி சக்திவேலென்றாலே ஒரு உண்மை சம்பவம் படத்தில் ஒளிந்து கிடக்கும் என்று பெயர் வாங்கவோ அந்த கடைசிக் காட்சி தர்மபுரி தீ விபத்து அமைந்திருப்பதாக எனக்கு தோன்றியது.
சர்ச்சைக்குரிய விஷயத்தை படமாக்கினாலும், அரசியல் வாசனையிருந்தாலும் படத்தை ஓட்டிவிடலாம் என்பதற்கான யுக்தியாயென தெரியவில்லை ஆனா ஏதோ அவசரகதியா மனசை சஞ்சலப்படுத்தாமல் 'டபக்கென்று' முடிந்து விடுகிறது கடைசிக் காட்சி.
அழுத்தமாக பதிய வேண்டிய படம், இன்னும் நல்ல வந்திருக்க வேண்டிய படம் என்றெல்லாம் இங்க உட்கார்ந்துக் கொண்டு எழுதுவது சுலபம்தான் ஆனா படம் எடுப்பவர்களுக்குத்தானே தெரியும் கஷ்டம். அதனால விட்டுடலாம். மொத்ததுல நல்ல படம்ப்பா, பார்க்காம விட்டுடாதீங்க.
-ஜெஸிலா([email protected])
Story first published: Friday, December 28, 2007, 11:46 [IST]