நான் காண விரும்பும் இந்தியா அதில் (என் பங்களிப்பு)
- லக்ஷ்மி
இந்த தலைப்பை நான் எழுதும் முன் தங்களுக்கு நான் ஓர் உண்மையை கூற விரும்புகிறேன்.
ஆம், நானும் ஒரு தேசத்துரோகி தான்.
தினமும் நான் அலுவலகத்திற்கு பேருந்தில் செல்வது வழக்கம். நிறைய பேருந்து வந்தாலும் நான் செல்ல வேண்டிய இடத்திற்கு ஒரே ஒரு பேருந்து மட்டும் தான் செல்லும். எனவே சரியான நேரத்திற்க்கு வந்து அந்தப் பேருந்தைப் பிடித்து விடுவேன். அப்படி நான் செல்லும் போது பல நிகழ்வுகளை சந்தித்திருக்கிறேன்.
சரியான சில்லறை இல்லை என்றால் அடாவடியாக பேருந்தை நிறுத்தி பயணிகளை கீழே இறங்கச் சொல்லும் நடத்துனரைப் பார்த்திருக்கிறேன். வயதானோர் ஏற சற்றே நேரமாகி விட்டால் அவர்களை திட்டி வண்டியில் ஏற்றும் ஓட்டுனரையும் பார்த்திருக்கிறேன். இப்படி பல நிகழ்வுகளை நான் கடந்து வந்துள்ளேன்.
அப்பொழுதெல்லாம் எனக்கு மிகவும் கோபம் தான் வரும். என்ன செய்வது, பொறுத்துக் கொண்டு பயணிப்பேன். ஒரு நாள் நான் என் வழக்கமான பேருந்தை தவற விட்டேன். வேறோரு பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்தது அன்று தான் நடந்தது என் தேச துரோகம்.
நடத்துனர் வந்து நின்றவுடன் நான் பத்து ரூபாய் கொடுத்து பயணச்சீட்டு கேட்டேன். நான் செல்லும் இடத்திற்க்கு மூன்று ரூபாய் கட்டணம். ஆனால் அவரோ தன்னிடம் சில்லறை என்று கூறி விட்டார். எனவே நான் என்னுடைய பையை திறந்து சில்லறையை தேடிக் கொண்டிருந்தேன் அதில் இரண்டு ரூபாய் சில்லரை இருந்தது உடனே அதை வாங்கிக் கொண்ட நடத்துனர் பயணச்சீட்டுக் கொடுக்காமலே நகர்ந்து விட்டார்.
சரி என் மேல் தான் குற்றம் என்று கையை விட்டு மீண்டும் என் பையில் சில்லறையைத் தேடிக் கொண்டிருந்தேன். அப்போது பல பேரிடம் சில்லறை வாங்கிக் கொண்டு பயணச்சீட்டு தராமலே இருந்தார் நல்ல வேளையாக ஒரு ரூபாய் நாணயம் என் கையில் தென்பட்டது அதை நான் நடத்துனரிடம் கொடுத்து விட்டு பயணச்சீட்டை வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில்.
ஆனால் அவரோ நான் கொடுத்த சில்லறையை வாங்க மறுத்து விட்டார் பயணச்சீட்டும் கொடுக்க வில்லை. நான் இறங்க வேண்டிய இடம் வரவே கட்டயத்தால் இறங்கி விட்டேன்.
சற்றே கனத்த இதயத்துடன் சில்லறை இல்லை என்ற காரணத்திற்காக பேருந்தில் இருந்து பயணிகளை இறக்கி விட்ட நடத்துனரைக் காட்டிலும், வயதானோரைத் திட்டி பேருந்தில் ஏற்றிய அந்த ஓட்டுனரைக் காட்டிலும், என்னையும் இந்த நடத்துனரையும் நினைத்து நான் இன்று வெட்கி தலை குனிந்தேன்.
அந்த நடத்துனர் ஒரு ரூபாயை வாங்கி இருந்தால் அவர் மட்டும் தான் தேசத்துரோகி ஆகியிருப்பார் அவர் வாங்க மறுத்ததால் நானும் இந்நாட்டிற்க்கு துரோகி ஆகிவிட்டேன்.
இரண்டடி நகர்ந்திருப்பேன், என் எதிரில் ஒரு சிறுமி கிழிந்த சட்டையுடன் அக்கா பசிக்குது என்றாள். கையில் இருந்த பத்து ரூபாய் நோட்டை சிறுமியின் கையில் கொடுத்து விட்டு நகர்ந்தேன் மனதில் ஏதோ ஒரு ஆறுதலுடன் இதெல்லாம் ஒரு துரோகமா என்று சில பேர் கேட்கலாம். ஆம் என்னைப் பொறுத்தவரை இதுவும் ஒரு வகை துரோகம் தான்.
சிறு வயதில் நான் கேள்விப்பட்ட ஒன்று. ஒரு சிறு எறும்பால் ஒரு யானையைக் கொல்ல முடியுமாம். அப்படி தான் நாம் செய்யும் ஒரு சின்ன தவறுகள் கண்டுக்கொள்ளாமல் விடப்பட்டால் அது நாளை பெரிய தவறுகளுக்கு வழி வகுக்கும். இப்படிப் பட்ட சில தவறுகளை நாம் தட்டிக் கேட்டோமானால் பல பெரிய தவறுகள் திருத்தப்படும் என்பது என் நம்பிக்கை.
நானும் ஒரு துரோகத்தை செய்திருக்கிறேன். எனவே நான் காண விரும்பும் இந்தியா (அதில் என் பங்களிப்பு). இதை எழுத எனக்கு தகுதியுள்ளது என்று நீங்கள் நினைத்தால் எனது ஆக்கத்திற்க்கு கமா இடுவேன், தகுதி இல்லை என்று நீங்கள் நினைத்தால் இது முற்றுப் பெரும். நான் தொடங்குவதும் முடிப்பதும் தங்கள் கையில் உள்ளது.
இதைப் படித்து விட்டு என்னைப் போல் பல பயணிகளும், அவரைப் போல் சில நடத்துனரும் திருந்தினால் போதும்.
- லக்ஷ்மி ([email protected])