இன்று (ஏப்ரல் 23) உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.
புத்தகங்கள் படிப்பதை ஊக்குவி்க்க, குறிப்பாக இளைய சமுதாயத்தினரிடையே படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் யுனெஸ்கோவி்ன் முயற்சியால் உருவாக்கப்பட்ட தினம் இது.
இந்த தினத்தை உலகம் முழுவதும் எழுத்தாளர்கள், நூலகங்கள், பதிப்பாளர்கள், புத்தக வாசிப்பில் தீவிர ஆர்வம் கொண்டவர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.
இந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,
'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்று சின்னஞ் சிறுவர்களும் உணரும் வண்ணம் கல்வி நெறியைக் கைக்கொண்டவர்கள் தமிழர்கள்.
2000 ஆண்டுகளுக்கும் முன்பே ஏன் கற்க வேண்டும்? எப்படி கற்க வேண்டும்? என்றெல்லாம் வினாத் தொடுப்பதோடு நின்று விடாமல் விடையையும் கூறிச் சென்றுள்ளனர். "கற்க கசடற'' என்றார் அய்யன் வள்ளுவர். தன்னிடமுள்ள கசடு போகவும், சமுதாயத்தில் நிலவும் கசடைப் போக்கவும் கற்க கசடற என்றார் அவர்.
மக்களிடம் படிக்கும் பழக்கம் அதிகமாக வேண்டும். படிப்பது அறிவுக்காக மட்டுமன்று. 'எழுத்தறியத் தீரும் இழிதகைமை' என்றார்கள். நம் தன்மானத்தை நாமே உணரவும், காக்கவும் எழுத்தறிவு பெருக வேண்டும்.
எனவே, பொது நூலகங்களுக்கு ஒவ்வொரு நூலிலும் 1,000 படிகளை வாங்கவும், அரசு நிகழ்ச்சிகளில் நூல்களை பரிசாக வழங்கவும், தமிழ் வளர்ச்சித்துறை வழியாக ஒவ்வொரு வகைப்பாட்டிலும் ஆண்டுதோறும் வெளிவரும் சிறந்த நூலுக்கு ரூ.20,000 என்றும்,
வெளியிட்ட பதிப்பகத்தாருக்கு ரூ.5,000 என்றும், 31 வகைப்பாடுகளுக்கும் பரிசுத் தொகையை உயர்த்தி வழங்கவும், ஊராட்சிகளில் நூலகங்கள் அமைக்கவும் அரசு ஆணையிட்டுள்ளது.
உலக புத்தக திருநாள் விழாவை தமிழ் வளர்ச்சித்துறையும், பொது நூலகத்துறையும், தென்னிந்தியப் பதிப்பாளர் சங்கமும் இணைந்து வாசகர்களோடும், எழுத்தாளர்களோடும் கொண்டாடுவதற்குப் பாராட்டுகள்.
எழுத்தாளர்களுக்கும், பதிப்பகத்தாருக்கும், வாசகர்களுக்கும் இந்த நாளில் என் இனிய வாழ்த்துகள் என்று கூறியுள்ளார் கருணாநிதி.