'டவுன்ஸ் சிண்ட்ரோம்'-கருவுற்ற காலத்தி்ல் ஸ்கேன் அவசியம்
ஆண்களின் 23 குரோமோசோம்களும், பெண்ணின் 23 குரோமோசோம்களும் இணைந்து தான் ஒரு கருவை உண்டாக்குகின்றன.
இந்த குரோமோசோம் ஜோடிகளில் 21வது குரோமோசோம் ஜோடியில் ஏற்படும் குறைபாடு காரணமாக வயி்ற்றில் வளரும் கருவில் 'டவுன்ஸ் சிண்ட்ரோம்' எனப்படும் மூளை வளர்ச்சியின்மை ஏற்படுகிறது.
இந்த குறைபாடுள்ள குழந்தைகளை குணப்படுத்த முடியாது. ஆனால் கர்ப்பத்திலேயே கருவுக்கு 'டவுன்ஸ் சிண்ட்ரோம்' உள்ளதா? என்பதை அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடியும்.
இதற்கான தொழில்நுட்பம் வந்து நீண்ட நாட்களாகிவிட்டாலும் அது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இல்லை.
மேலும் இது தொடர்பான ஸ்கேனுக்கு அதிக செலவாவதால் பல பெற்றோர் இந்த பரிசோதனைகளை செய்வதில்லை.
இந் நிலையில் மெடிஸ்கேன்' நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் சுரேஷ் மற்றும் டாக்டர் சுஜாதா ஜெகதீசன் ஆகியோர் நிருபர்களிடம் பேசுகையில்,
சாதாரண ஸ்கேன்கள் மூலம் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் குறைபாடுகளை ஓரளவே தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக, குரோமோசோம் மாற்றத்தால் உருவாகும் டவுன்ஸ் சிண்ட்ரோமை கண்டறிவதற்கு அதிநவீன கருவிகள் தேவைப்படுகின்றன.
முன்பெல்லாம், கரு உருவான 5 மாதங்களுக்கு பிறகுதான் குழந்தையின் மூளை வளர்ச்சி பற்றி அறிய முடியும். ஆனால் தற்போது கரு உருவான 11 முதல் 13 வாரங்களுக்குள்ளாகவே குழந்தையின் மூளை வளர்ச்சி பற்றி அறிய முடிகிறது.
கரு உண்டான பெண்ணின் ரத்தமாதிரியை எடுத்தும், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலமும் இந்த சோதனைகள் நடத்தப்படும்.
இந்த 2 சோதனைகளில் கிடைக்கும் முடிவுகளைக் கொண்டு, குழந்தைக்கு டவுன்ஸ் சிண்ட்ரோம் பாதிப்பு உள்ளதா என்பதை அறியலாம். இதில் திருப்தி ஏற்படாவிட்டால், அடுத்ததாக கருவின் நஞ்சுக்குழாயில் இருந்து திசுக்களை எடுத்து குரோமோசோம் பரிசோதனைக்கு உட்படுத்தி கண்டுபிடிக்க முடியும். இந்த சோதனைக்கு ரூ.10,000 வரை செலவாகும் என்றனர்.
தமிழ்நாடு டவுன்ஸ் சிண்ட்ரோம் அமைப்பின் தலைவர் டாக்டர் ரேகா ராமச்சந்திரன் கூறுகையில்,
டவுன்ஸ் சிண்ட்ரோம் குழந்தைகளை பராமரிப்பதற்கு தனிப்பட்ட கவனம் தேவை. அந்த வகையான குழந்தையை பெற்றெடுத்த பிறகு கஷ்டப்படுவதை விட, கருவிலேயே தெரிந்து கொள்வது நல்லது. இந்த வகை குழந்தைகள் மிகவும் அன்பாக இருப்பார்கள். அவர்களுக்குள் திறமைகள் புதைந்து இருக்கிறது. பயிற்சி அளிப்பதன் மூலம் அவற்றை வெளியே கொண்டு வர முடியும்.
சென்னை அபிராமபுரம் 3வது தெருவில் உள்ள தமிழ்நாடு டவுன்ஸ் சிண்ட்ரோம் அமைப்பை அணுகுபவர்களுக்கு இந்த சோதனையை இலவசமாக செய்து வருகிறோம். எங்கள் அமைப்பு மூலம் இதுவரை 30 பேர் சோதனை செய்துள்ளனர்.
தமிழக அரசும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முன்வந்துள்ளது. பொதுவாக, கருவுற்றிருக்கும் அனைத்து தாய்மார்களும் இந்த சோதனைகளை செய்து கொள்வது அவசியமாகும். இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறோம் என்றார்.