மக்கள் தொகையில் சீனாவை முந்தவுள்ள இந்தியா!
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி மத்திய அரசின் சுகாதார ஆய்வு மையத்தின் கீழ் செயல்படும் மக்கள் தொகை ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவர அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம்:
கடந்த 100 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 5 மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மக்கள் தொகை 1.4 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், சீனாவை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் 0.6 சதவீதம் மட்டுமே மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்டுள்ளது.
எனவே, இதே வேகத்தில் மக்கள் தொகை அதிகரித்தால் 2050ம் ஆண்டில் சீனாவை இந்தியா முந்திவிடும்து.
2009ம் ஆண்டு வரை இந்திய மக்கள் தொகை 119.8 கோடியாகவும், சீன மக்கள் தொகை 134.5 கோடியாகவும், பாகிஸ்தான் மக்கள் தொகை 18 கோடியாகவும் இருந்தன.
வரும் 2050ம் ஆண்டில் இந்திய மக்கள்தொகை 161. 38 கோடியாகவும், சீனா மக்கள் தொகை 141. 7 கோடியாகவும் இருக்கும்.
இந்தியாவின் சில குறிப்பிட்ட மாநிலங்களின் மக்கள் தொகை மட்டும் சில நாடுகளின் மக்கள் தொகையையே மிஞ்சும் அளவுக்கு உள்ளது.
குறிப்பாக உத்தரப்பிரதேச மாநில மக்கள் தொகை 18.3 கோடி. இது கிட்டத்தட்ட பிரேசில் நாட்டு மக்கள் தொகைக்கு இணையானதாகும்.
மகாராஷ்ட்டிரா மக்கள் தொகையான 10. 4 கோடி, மெக்சிகோவுக்கும், பிகார் மாநில மக்கள் தொகையான 9 கோடி ஜெர்மனியின் 8. 3 கோடி மக்கள் தொகையைவிட அதிகம்.
2026ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகையில் 22 சதவீதம் உத்தரப் பிரேதத்திலும், 8 சதவீதம் பேர் பிகாரிலும், 7 சதவீதம் பேர் மத்திய பிரதேசத்திலும், இன்னொரு 7 சதவீதம் பேர் ராஜஸ்தானிலும் இருப்பர்.
தென் மாநிலங்களின் மொத்த மக்கள் தொகை இந்திய மக்கள் தொகையில் 13 சதவீதமாக இருக்கும். சிறப்பான கல்வியறிவு மூலம் தென் மாநிலங்களில் குறிப்பாக கேரளத்திலும் தமிழகத்திலும் மக்கள் தொகை பெருக்கம் பெருமளவில் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இப்போது உலக நாடுகளில் பரபரப்பளவில் 2.5 சதவீதம் மட்டுமே உள்ள இந்தியாவில், உலகின் மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் நம் நாட்டில் தான் வசிக்கின்றனர்.
கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை-அரசு:
இந் நிலையில் மக்கள் தொகையைக் கட்டுப்படு்த்த அரசு எந்த புதிய திட்டத்தையும் அமல்படுத்தாது என்று மத்திய நலத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.
சிறிய குடும்பத்தின் நன்மைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஊட்டப்படும், அதே நேரத்தில் குடும்பக் கட்டுப்பாடை தீவிரமாக்க அமலாக்கும் திட்டம் ஏதும் இல்லை என்றார்.