பாரதிதாசன் பல்கலைக்கழக முதல் பெண் துணைவேந்தராக பேராசிரியை மீனா நியமனம்
திருச்சி அண்ணாதொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு முதல் முதலாக துணைவேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். துணைவேந்தரின் பெயர் பி.தேவதாஸ் மனோகரன். இவர் சென்னையில் உள்ள அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் துறை தலைவராக பணிபுரிந்தார்.
தேவதாஸின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம். ஆரல்வாய்மொழி கிராமம். இவர் பள்ளிப்படிப்பை நாகர்கோவிலிலும், பி.இ. என்ஜினீயரிங் படிப்பை திருச்சி ஆர்.இ.சி. கல்லூரியிலும் படித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ. மற்றும் பிஎச்.டி. படிப்பையும் முடித்தார். கடந்த 28 வருடங்களாக பேராசிரியராக பணிபுரிகிறார். அவர் வழிகாட்டியதன் மூலம் 9 மாணவர்கள் பிஎச்.டி. பட்டம் பெற்றனர். 70-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி இதழ்களை வெளியிட்டுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு இவரது முக்கிய ஆராய்ச்சியாக அமைந்தது. மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார்.
அண்ணாபல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்தார். தமிழ்நாடு இளம் விஞ்ஞானி விருதை பெற்றுள்ளார். இவருடைய பெற்றோர் மனோகரன்-விமலா. மனைவி டாக்டர் கீதா சென்னை மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். மகள் இலக்கியா ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்கிறார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் கே.மீனா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருச்சியில் உள்ள ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி முதல்வராக இதுவரை பணிபுரிந்தார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பேராசிரியை மீனா 1962-ஆம் ஆண்டு பிறந்தார். இவர் எம்.இ. மற்றும் பிஎச்.டி. படிப்பை சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் படித்தார். இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக இருந்தார். இவர் காதுகேளாத மாணவர்கள் கல்வி கற்பதற்கு வசதியாக புதிய மென்பொருளை உருவாக்கினார்.
இதற்காக அவர் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலிடம் தேசிய விருது பெற்றார். பல்வேறு புத்தகங்களை எழுதி உள்ளார். சமூக நலனில் அதிகஅக்கறை கொண்டவர். இவருடைய கணவர் குஞ்சிதபாதம் திருச்சியில் வக்கீல் ஆக உள்ளார். மகன் சேகர் அமெரிக்காவில் படிக்கிறார்.
இரு துணைவேந்தர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள். இதற்கான உத்தரவை ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா பிறப்பித்துள்ளார்.