இன்று வரலட்சுமி நோன்பு கடைப்பிடிப்பு-சிறப்பு பூஜைகள்
கணவர் நல்ல நலமுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டிய, மகாலட்சுமியை நினைத்து இருக்கும் விரதம்தான் வரலட்சுமி நோன்பு. இதையொட்டி தமிழகத்தில் வீடுகள், கோவில்களில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
திருப்பாற்கடலில் இருந்து செல்வம் தழைக்க அவதரித்த திருமகள் மகாலட்சுமி. சகல செல்வங்களுக்கும் அதிபதியான மகாலட்சுமியிடமிருந்து குபேரன் கடன் வாங்கியதாக வரலாறுகள் உண்டு. லட்சுமியின் சகோதரனாகிய சந்திரன் பூரண நிலவாக ஒளிவீசும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய முதல் வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பாக கொண்டாடப்படுகிறது.
கணவர் மற்றும் குடும்பத்தினர் நலமுடனும், வளமுடனும் வாழ வேண்டி, சுமங்கலிப்பெண்கள், இந்த நன்னாளில், விரதம் இருந்து, வீட்டின் பூஜை அறையில் மகாலட்சுமியை பிரதிஷ்டை செய்து வழிபடுகிறார்கள்.
நந்தனார், விக்கிரமாதித்த மகாராஜா ஆகியோர் இந்த பூஜையைச் செய்து துன்பங்களில் இருந்து நீங்கியதாக கூறுவார்கள். வரலட்சுமி வழிபாட்டை திருமகளே மகத நாட்டின் குண்டினிபுரத்தில் இருந்த சாருமதி என்கிற ஏழைப் பெண்ணைக் கடைப்பிடிக்கச்செய்து உன்னதமான நிலையையும் பதினாறுவகை பேறுகளையும் அடையும் வகையில் உதவி புரிந்தாள் என்ற வரலாறும் உண்டு.
வரலட்சுமி நோன்பின் பெருமையை பார்வதிக்கு சிவபெருமான் எடுத்து விளக்கி வரலட்சுமி நோன்பின் சிறப்பைத் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
வரலட்சுமி நோன்பு, நாளில் பூஜை முடிந்ததும், சுமங்கலி மற்றும் கன்னிப்பெண்களை லட்சுமியாகக்கருதி மஞ்சள், குங்குமம், மஞ்சள் சரடு, தாம்பூலத்துடன் துணி வளையல், இனிப்பு வகைகளை வழங்குவதை இன்றளவும் பெண்கள் கடைப்பிடிக்கிறார்கள்.
வரலட்சுமி நோன்பையொட்டிசென்னை பெசன்ட் நகரில் உள்ள அஷ்டலட்சுமி கோவிலில், இன்று காலை அம்மனுக்கு தாலிச் சரடு சார்த்தி அலங்கார சேவை, அர்ச்சனை நடைபெற்றது.
இன்று மாலையில் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு தாலிச் சரடுகள், மங்கலப் பொருட்கள் பிரசாதமாக அளிக்கப்படும்.
வரலட்சுமி நோன்பையொட்டி வீடுகளில் பூஜைகள் நடத்தப்படுகின்றன. அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகளுக்கு ஏற்பாடு செயயப்பட்டுள்ளது.