துபாயில் தமிழ்த்தேர் இதழ் வெளியீடு மற்றும் கவியரங்கம்

விழாவின் சிறப்பு விருந்தினராக மீடியா சுல்தான் குரூப் ஆப் நிறுவனத்தின், பொது மேலாளர் திரு.ராம் முத்தையா அவர்களும், வி.களத்தூர் வலைத்தளத்தின் ஆசிரியர் வி.களத்தூர் ஷா அவர்களும் கலந்து கொண்டனர்.
கவியரங்குடன் ஆரம்பித்த நிகழ்வை, துணைத்தலைவர் ஜியாவுதீன், மற்றும் அமைப்பின் மூத்த உறுப்பினரான முத்துப்பேட்டை சர்புதீன் இணைந்து நடத்த, கவிஞர்கள், சந்திரசேகர், ரஜகை நிலவன், முகவை முகில்,கலையன்பன் ஜெயராமன் ஆனந்தி, ஒகளூர் நிலவன், இளைய சாகுல், முகவை காளிதாஸ், மதுக்கூர் ரூமி, புரட்சித்தேனி கார்த்திக், முகவை முத்து, மதுக்கூர் சேட்,துரைமலைவேல்,தஞ்சாவூரான் பாரூக், ஜியாவுதீன் ஆகியோர் கவிபாட கவியரங்கு இனிதே நிறைவுற்றது.
அதனைத் தொடந்து தன் வழக்கமான நகைச்சுவை பாணியில் அமைப்பின் துணைத்தலைவர் கீழைராஸா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க,உறுப்பாண்மைச் செயலாளர் ந.சந்திரசேகர் வரவேற்புரையாற்றினார்.
தொடர்ச்சியாக சங்கமம் கலையன்பன் மற்றும் முதுவை ஹிதாயத் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்த, அவர்களுக்கு அமைப்பு சார்பில் குழந்தை சாகுல் மற்றும் பாஸ் பாஸ்கரன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். அதைத் தொடர்ந்து,சிறப்பு விருந்தினர்களால் காலச்சக்கரம் இதழ் வெளியிடப்பட, பத்மா ஸ்டேன்லி மற்றும் முஸ்தபா அவர்கள் பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து பேசிய சிறப்பு விருந்தினர் ராம் முத்தையா, அமைப்பின் செயல்பாடுகளைப் பாராட்டியதோடு, இதை இன்னும் சிறப்பாகச் செய்ய தன்னால் ஆன எல்லா உதவிகளையும் செய்வதாக உறுதி கூறினார். மேலும் நம் இனம் இதுவரை சாதித்த சாதனைகளை கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் கொண்டு வரவேண்டுமென்று கேட்டுக் கொண்ட அவர், அமீரகத்தில் இவ்வமைப்பின் மூலம் தமிழ் மொழிக் கற்றுத்தர சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.
அதன் பின் பேசிய வி.களத்தூர் கமால் பாட்சா அவர்கள் ராம் முத்தையா அவர்களின் உரையை ஆமோதித்துப் பேசியதோடு.வரலாற்றிலிருந்து நாம் படிப்பினை கற்றுக்கொள்ள வேண்டும் அதற்காக வரலாறுகளை நினைவு கூறுதல் அவசியம், என்று வலியுறுத்தியதோடு, கவிதை என்பது பக்கம் பக்கமாக இருப்பது மட்டுமல்ல, இரண்டுவரிகளில் இருந்தாலும் இதயம் தொடும்படி எழுத வேண்டுமென்று புதிய கவிஞர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் அறிமுகத்துடன், பிப்ரவரி மாத, முதல் வாரம் நடக்க இருக்கும் தமிழ்த்தேர் இதழின் முதல் அச்சுப்பிரதி வெளியீட்டு விழா தொடர்பான அறிவிப்பு செய்யப்பட்டது. இறுதியாக முத்துப்பேட்டை சர்புதீன் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.












Click it and Unblock the Notifications