ஜன. 4 முதல் சென்னை புத்தக கண்காட்சி-666 அரங்குகள்
சென்னை: சென்னையில் மிகவும் பிரபலமான புத்தகக் கண்காட்சி வருகிற 4ம் தேதி தொடங்குகிறது. இது 34வது புத்தகக் கண்காட்சியாகும்.
கிட்டத்தட்ட ஒரு கோடி நூல்கள் விற்பனைக்காக இங்கு வைக்கப்படவுள்ளன. ஆண்டுதோறும் சென்னையில் தென் இந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் புத்தகக் கண்காட்சி நடைபெறும். இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாகும். ஆண்டுதோறும் இந்த கண்காட்சிக்கு மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது.
அந்த வகையில், 34வது கண்காட்சி பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
ஜனவரி 4ம் தேதி மாலை 5 மணிக்கு கண்காட்சியை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் தொடங்கி வைக்கிறார்.
முதலமைச்சர் கருணாநிதி சங்கத்திற்கு வழங்கிய ரூ.1 கோடி நிதியில் ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளை வைப்பு தொகை மூலம் கிடைத்த வட்டியில் இருந்து 6 எழுத்தாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் வழங்கப்படுகிறது. அந்த பொற்கிழியை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் வழங்குகிறார்.
இந்த பொற்கிழி, கட்டுரைக்காக தமிழண்ணல், கவிதைக்கு கவிஞர் அப்துல்ரகுமான், நாடகத்திற்கு பேராசிரியர் கே.ராமானுஜம், சிறுகதை- புனை கதைக்கு சி.எஸ்.லட்சுமி, மராத்தி இலக்கியத்திற்கு அர்ஜ×ன் டாங்லே, ஆங்கில இலக்கியத்திற்கு கா.செல்லப்பன் ஆகியோருக்கு அளிக்கப்படுகிறது.
சங்கத்தின் சார்பில் பதிப்பக செம்மல் கணபதி விருது இந்து பப்ளிகேசன்ஸ் வி.கரு.ராமநாதனுக்கும், மணிவாசகம் பதிப்பகம் பதிப்பு செம்மல் ச.மெய்யப்பன் விருது சாந்தி புக்ஸ் இ.வேதகிரிக்கும், குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா விருது குழந்தை எழுத்தாளர் கொ.மா.கோதண்டத்திற்கும், ஆர்.கே.நாராயணன் விருது சிறந்த மொழிபெயர்ப்பாளர் ஆர்.நடராஜனுக்கும், நூலகர் விருது நா.ஆவுடையப்பனுக்கும் வழங்கப்படுகிறது.
கண்காட்சி தினசரி பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை இருக்கும். 17ம் தேதி கண்காட்சி நிறைவு பெறும்.
கிட்டத்தட்ட ஒரு கோடி நூல்கள் இங்கு வைக்கப்படவுள்ளன. இதற்காக 666 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. மொத்தம் 376 நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்கின்றன.
புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி உண்டு. நுழைவுக்கட்டணம் ரூ.5 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 12 வயது வரை உள்ள சிறுவர்-சிறுமிகளுக்கு கட்டணம் கிடையாது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் கட்டணம் கிடையாது. ஆனால் அதற்கான இலவச அனுமதி சீட்டுகள் 5 லட்சம் அச்சடித்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
தினசரி மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை கலை நிகழ்ச்சிகள் பட்டிமன்றம், கருத்தரங்கு, இலக்கிய சொற்பொழிவு ஆகியவை நடைபெற உள்ளன.