இன்று மகா சிவராத்திரி-சிவாலியங்களில் மக்கள் வழிபாடு
இன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள முக்கிய ஆலயங்கள், சிவாலயங்களில் மக்கள் கூட்டம் குவிந்தது.
சிவராத்திரி என்பது சிவனுக்குரிய பூஜைகளைச் செய்து அவனின் அருளைப் பெறும் நாள் என்பதாகும். அன்றைய தினம் விரதம் இருந்து சிவனின் அருளைப் பக்தர்கள் பெறுவார்கள்.
இந்த சிவராத்திரி ஐந்து வகைப்படும். நித்ய, பட்ச, மாத,யோக, மகா சிவராத்திரி என்பது அது.
நித்ய என்பது மாதந்தோறும் கிருஷ்ணபட்ச சதுர்த்தியின்போது வருவதாகும். மாதா மாதம் வருவது மாத சிவராத்திரி. திங்கள்கிழமையன்று, பகல் மற்றும் இரவு இரு பொழுதும் அமாவாசையாக இருந்தால் அது யோக சிவராத்திரி என்பதாகும். கிருஷ்ணபட்சி சதுர்த்தியானது, மாசி மாதத்தில் வரும்போது அது மகா சிவராத்திரியாக அனுசரிக்கப்படுகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் மகா சிவராத்திரியாகும். சிவராத்திரி குறித்து புராணங்களில் ஏராளமான விளக்கங்கள் உள்ளன. முன்பு ஒருமுறை உலகம் அழிந்தது. இதையடுத்து அழிந்து போன உலகை மீண்டும் சிருஷ்டித்து உயிர்ப்பிக்குமாறு சிவனை வேண்டி, உமாதேவி தாயார், இரவில் விரதம் இருந்து வேண்டினார். அதுவே சிவராத்திரியாக கொண்டாடப்படுவதாக ஒரு ஐதீகம்.
இதேபோல மேலும் பல கதைகளும் உள்ளன. எது எப்படி இருந்தாலும், சிவனை வேண்டி, அவன் அருள் வேண்டி, விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் அனைத்து துயரங்கள், வினைகளிலிருந்து விடுபடலாம் என்பதே சிவராத்திரியின் தத்துவமாகும்.
சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, சிவ பெருமான் குடிகொண்டுள்ள ஆலயஙக்ளுக்குச் சென்று சிவபூஜை செய்ய வேண்டும். பகல் முழுவதும் உண்ணாமல் உபவாசம் இருக்க வேண்டும். உறங்கவும் கூடாது. இரவில் நான்கு கால பூஜைகளில் கலந்து கொள்ள வேண்டும்.
இன்று மகா சிவராத்திரி தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. ராமேஸ்வரம் கோவிலிலும், கடலில் நீராடவும் மக்கள் பெருமளவில் குவிந்தனர். அதேபோல சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
காளஹஸ்தியில் உள்ள வாயுலிங்கேஸ்வரர் கோவிலிலும் இன்று நடந்த சிறப்பு வழிபாட்டை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு வணங்கி சிவன் அருள் பெற்றனர்.