108 ஆம்புலன்ஸ் வாகனங்களை சோதனையிட கலெக்டர் உத்தரவு
நெல்லை: 108 ஆம்புலன்ஸ்களின் மூலம் பணம் எடுத்துச் செல்லும் வாய்ப்பு இருப்பதால் அவற்றை சோதனை செய்யுமாறு மாவட்ட கலெக்டர் ஜெயராமன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்ததில் இருந்து இதுவரை பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வர்த்தகம் உள்ளிட்ட நியாயமான காரணங்களுக்காக பணத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்பவர்கள் உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்ல எவ்வித தடையும் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் வாகனஙகள் மூலம் பணத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல வாய்ப்புகள் இருப்பதாக தேர்தல் அலுவலருக்கு புகார்கள் வந்தன. அந்த புகார்களின் அடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்களிலும் திடீர் சோதனை நடத்த மாவட்ட கலெக்டர் ஜெயராமன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் பேரில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.