கதர் கிராம தொழில்கள் கண்காட்சியில் கண்கவர் கைவினைப் பொருட்கள்
நெல்லை: கதர் கிராம தொழில்கள் ஆணையம் சார்பில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்ட பயனாளிகள் கண்காட்சி நெல்லை மாவட்டம் பாளையம் கோட்டையில் வியாழக்கிழமை தொடங்கியுள்ளது. கண்காட்சியில் கதர் கிராம தொழில் பொருட்கள் அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட நிர்வாகம் மற்றும் வங்கிகளின் ஒத்துழைப்புடன் கடந்த 3 ஆண்டுகளில் நெல்லை மாவட்டத்தில் பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 232 திட்டங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 480 லட்சம் மானியமாக வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. 3 ஆயிரத்து 740 பேர் இத்திட்டத்தில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கதர் கிராம தொழில்கள் ஆணையம் ஆண்டுதோறும் பிரமதரின் வேலை வாய்ப்பு உருவாக்க திட்ட பயனாளிகள் கண்காட்சியை நடத்தி வருகின்றனர். இவ்வாண்டு மதுரை கோட்டத்தின் கீழ் 5 கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளன. அதில் முதல் கண்காட்சியை அம்பை சர்வோதய சங்கம் மூலம் பாளையம்கோட்டை அருண் மகாலில் தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியில் கதர் கிராம தொழில் பொருட்களான கதர் ரகங்கள், மெத்தை, தலையணை, தேன், பத்தி, மரச்சாமான் வகைகள், பிரம்பு வகைகள், மண்பாண்டம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கண்கவர் கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த கண்காட்சி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.