கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை
கரூர்: கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு முதலாம் வகுப்பு படிக்கும் மாணவன் திவ்யதர்ஷன் கீபோர்டு வாசித்த சம்பவம் பார்வையாளர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கரூர் பரணி பார்க் பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கும் மாணவன் திவ்யதர்ஷன்(5). இவர் காலை 10.30 மணியளவில் தொடங்கி மதியம் 1 மணி வரை தொடர்ந்து இரண்டரை மணி நேரம் கீபோர்டு வாசித்தார்.
அவர் திரை இசை பாடல்கள், பக்திப் பாடல்கள், தேச பக்திப் பாடல்கள், கிருஸ்துமஸ் பாடல்கள் என 50க்கும் மேற்பட்ட பாடல்களை வாசித்தார். இதில் 16 பாடல்களை கண்களை கருப்பு துணிகளால் கட்டிக் கொண்டு வாசித்தார். இதன் மூலம் அவர் இந்திய அளவில் புதிய சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது,
சாதாரணமாக 5 வயது மாணவன் கீபோர்டில் 5 பாடல்கள் தொடர்ந்து வாசிப்பதே சிரமமான விஷயம். ஆனால் இந்த மாணவன் இரண்டரை மணி நேரம் வாசித்து புதிய சாதனை படைத்துள்ளான். இது இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் 2012 ம் ஆண்டு பதிப்பில் இடம் பெறும் என்றும், மேலும் இது கின்னஸ் சாதனை புத்தகத்திற்கு பரிந்துரைக்கப்படும் என்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தமிழக பிரதிநிதி டிராகன் ஜெட்லி தெரிவித்துள்ளார் என்றார்.
இந்த நிகழ்ச்சியல் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெரியவர்களும், மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டு சாதனை மானவன் திவ்யதர்ஷனை வாழ்த்தினர்.