சுதந்திர தினத்தில் பிறந்து 100 வயதை தொட்ட ஆசிரியருக்கு பொதுமக்கள் பாராட்டு- வாழ்த்து
மாசுபட்ட சுற்றுச்சூழல், பல்வேறு உணவு பழக்க வழக்கங்கள், தொழில் மற்றும் வேலை செய்யும் இடங்களில் டென்ஷன், மது, சிகரெட் போன்ற போதை பழக்க வழக்கங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் 50 வயதை அடைவதற்கே திக்கித் திணறும் தலைமுறையினர் மத்தியில் சுதந்திர தினமான இன்று 100-வது பிறந்தநாளைக் கொண்டாடும் கடையநல்லூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பையா நாயுடு என்பவரை அவருடைய முன்னாள் மாணவர்கள் உள்பட ஏராளமானோர் சந்தித்து ஆசி பெற்று வருகின்றனர்.
35 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி கடந்த 1-6-1971-ல் ஓய்வு பெற்றார். 1934-ம் ஆண்டு முதல் 36-ம் ஆண்டு வரை 2 ஆண்டுகள் ஹையர் கிரேடு ஆசிரியர் பயிற்சி பெற்ற இவர் தனது படிப்பை முடித்த பின்பு வீரவநல்லூர், கோடகநல்லூர், பிள்ளையார்நத்தம், நெட்டூர், வீரசகாமணி, மடத்துக்கட்டு, கரிவலம்வந்தநல்லூர், ஊர்மேனியழிகியான், காரிதர்மம் உள்பட பல்வேறு கிராமங்களில் பணியாற்றி உள்ளார்.
இவரின் முதல் மாத சம்பளம் 1 ரூபாய். 1971-ம் ஆண்டு இவர் ஓய்வு பெறும் போது இவரது முதல் பென்ஷன் 60 ரூபாய் என கூறும் இவர் தற்போது ரூ. 7 ஆயிரத்து 140 ஐ ஓய்வூதியமாகப் பெற்று வருகிறார். தான் உண்டு, தன் வேலையுண்டு என்கிற மனபாவமும், எந்த சூழ்நிலையிலும் அடுத்தவர்களை பற்றி புறம் கூறாமையும், எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் டென்ஷன் ஆகாத குணமும், உணவு பழக்க வழக்கம் போன்றவை தான் தனது 100 வயது நாட் அவுட்டுக்கான காரணம் என பெருமிதத்துடன் சுப்பையா நாயுடு தெரிவித்தார்.
இந்த வயதிலும் யாருடைய உதவியும் இல்லாமல் தன்னுடைய வேலைகளை தானே கவனித்துக் கொளளும் இவர் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும் தனது 95-வது வயது வரை தீவிரமாக விவசாயம் செய்ததாகக் கூறினார். வெளிநாடுகளில் பணிபுரியும் மகன்கள், பேரன்கள் என சொந்தங்கள் பெருகிய நிலையிலும் தனது பென்ஷன் பணத்தில் தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டு உறவினர்களுக்கும் உதவி வருகிறார்.
இதில் முக்கியமான செய்தி என்னவென்றால் தனது 100வது வயதிலும் விவசாய நில சம்பந்தமான பிரச்சனையில் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதையும் நடத்தி வருகிறார். முதுமை காரணமாக நாம் தளர்வடையும் நிலையிலும் நமக்கு தவறு என்று தோன்றினால் போராடாமல் விட்டு விடக் கூடாது என்று இவர் கூறும் செய்தி இளைய தலைமுறையினருக்கு பாடமாகும்.
1950களில் புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளராக வலம் வந்த எஸ்.எம்.சுப்பையா நாயுடு கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்தான். அவரை தொடர்ந்து அவரது உறவினரான ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பையா நாயுடுவும் இப்பகுதிக்கு பெருமை சேர்த்து வருவதாக இவரை சந்தித்து ஆசி பெற்ற பலர் மகிழ்ச்சியுன் தெரிவித்தனர்.