பள்ளி விடுமுறை நீட்டிப்பு: ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்
ஊட்டி: பள்ளிகள் திறக்கும் நாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
சுற்றுலா சீசன்
தமிழகத்தின் முன்னணி சுற்றுலா தலமான ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த கோடை சீசனில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி ஆகியன நடந்தன. சுற்றுலாத்துறை சார்பில் ஊட்டி படகு இல்லத்தில் படகுப் போட்டி நடத்தப்பட்டது.
பொதுவாக, மலர் கண்காட்சி முடிந்த பிறகு ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர மாட்டார்கள். இந்த முறை, சீசன் முடிவடையும் தருவாயிலும் கூட்டம் அதிகரித்து வருகிறது.
தள்ளிவைக்கப்பட்ட பள்ளி திறப்பு
சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தப்பட்டதால், பள்ளிகள் ஜூன் 15-ம் தேதிக்கு மேல்தான் திறக்கப்பட இருக்கின்றன. இதனால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. சேரிங்கிராஸ் தோட்டக்கலைத்துறை தகவல் மைய வளாகத்தில் புகைப்பட கண்காட்சி துவங்கியுள்ளது. இங்கு பல்வேறு அரிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி 6 நாட்கள் நடைபெற இருக்கிறது.












Click it and Unblock the Notifications