சிறப்பாக நடந்த யுஏஇ தமிழ்ச் சங்கத்தின் நம்பிக்கை சுவரங்கள்
யுஏஇ: ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தமிழ்ச் சங்கம், ஏப்ரல் 15ம் தேதி நம்பிக்கை சுவரங்கள் 2011 என்ற நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியது.15 ஏப்ரல் 2011 அன்று யுஏஇ தமிழ்ச் சங்கம் இன்னும் ஒரு மறக்க முடியாத நினைவை நமக்கு அள்ளித் தந்தது. தமிழ்ச் சங்கம் வழங்கிய நம்பிக்கை சுவரங்கள் 2011 எதிர்பாராத வரவேற்ப்பும், எண்ணிலடங்கா பார்வையாளர்களுமாய் இனிதாய் அமைந்தது. இதை ஒரு சரித்திர சாதனை என சொன்னால் கூட மிகையாகாது.
வரவேற்ப்புரை வழங்கி விக்னேஷ் ரவி அவர்கள் குத்து விளக்கு ஏற்ற திருமதிகளை அழைத்தார். அழைப்புக்கிணங்கி ராதா வெங்கட்ராமன், ஜனனி, வசந்தா, கீதா சுவாமி நாதன், சித்ரா ப்ராஸ்பர், கங்கா ரமேஷ் அவர்கள் ஏற்றி வைக்க இனிதுடன் விழா துவங்கியது.
செவிக்கினிய நம் தமிழ்தாய் வாழ்த்து. சௌக்கியா அர்விந்த், கோகிலா அருண், விஜயா ரவி, விஜி பாலு, பிரியா விஜய் அவர்களால் பாடப்பட்டது. வந்தவர்களை வரவேற்று சித்ரா ப்ராஸ்பர் சொல்லுரை வழங்கினார்
அதன் பின்னர், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்ரீ கங்கா மற்றும் செந்தில் வேலன் அவர்கள் வசம் ஒப்படைக்கப் பட்டது.
இந்த நிகழ்ச்சி நல்லமுறையில் நடந்தேற உறுதுணை செய்த நல்ல இதயங்களின் பெயர்கள் கார்த்திக் மற்றும் கீதா சுவாமி நாதன் அவர்களால் வாசிக்கப்பட நிகழ்ச்சி தொடர்ந்தது.
முதல் 20 நிமிடங்கள் வாத்தியங்களின் இசைக் கோர்வை அரங்கை நிறைத்தது. கீ போர்ட், டிரம்ஸ், எல்க்ட்ரானிக் பேட், தபேலா, வயலின் மற்றும் குரல்கள் இணைந்து ஒரு ராக ராஜாங்கம் நடந்தது. அதுவே வந்தவர்களை இசையால் நிரப்பி, மனதை கொள்ளை கொண்டது. தமிழ்ச் சங்க உறுப்பினர் செல்வின் இதை நான்கே நாட்களில் ஒருங்கிணைத்தது அற்புதம். இத்தகைய சிறப்பான நிகழ்ச்சி அமைத்து தந்த செல்வின் அவர்களுக்கு நம் பிரத்யேக நன்றிகள் உரித்தாகட்டும்.
அதனை தொடர்ந்து, கார்த்தி (அல் நூர் மாணவர்) காதல் ஓவியம் திரைப்படத்தின் சங்கீத ஜாதி முல்லை பாடலை பாட, பார்வையாளர்கள் தத்தம் இருக்கை விட்டு எழுந்து பாராட்டினர். ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டாலும், இசை ஆதிக்கம் செய்த அவரது திறமைக்கு கிடைத்த பாராட்டு. அவர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
இசையை தொடர்ந்து நடனங்கள் ஆரம்பித்தது. கற்பனை செய்ய முடியாத அளவில் அல் நூர் அமைப்பின் குழந்தைகள் ஆடிய நடனம் 25 நிமிடங்கள் நம்மை கண்ணீரால் நிறைத்து மனதை கொள்ளை கொண்டது. இவர்கள் சாதாரணர்கள் அல்ல, இறைவனின் குழந்தைகளே என மனதார ஏற்றுக் கொள்ளவும் வைத்தது. பார்வையாளர்களின் ஆதரவும், அன்பும் இவர்களை மென்மேலும் வளர்க்கும் என்பது நிச்சயம். பிராஸ்பர் மற்றும் சித்ரா ப்ராஸ்பர் வெகுமதிகள் வழங்கி நிகழ்ச்சிக்கு அணி சேர்த்தார்கள்.
நடனங்கள் தொடர்ந்து, நம் அன்பிற்குரிய கேப்டன் ரமேஷ் விஸ்வநாதன் உரை நிகழ்த்தினர். இந்த நிகழ்ச்சி நடந்தேற ஒத்துழைத்த அனைத்து நிறுவனங்களுக்கும், ஸ்பான்சர்சுக்கும், சங்க உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்தார். முந்தைய ஆண்டில் நடந்த நம்பிக்கை சுவரங்கள் 2010 நினைவு கூர்ந்து, நம்பிக்கை சுவரங்கள் 2011 இன்னும் சிறப்பாகும் என நம்பிக்கை கொள்வதாய் குறிப்பிட்டார்.
யுஏஇ தமிழ் சங்கம் இசை முன்னோடிகள் எம்.எஸ். விஸ்வ நாதன், இளையராஜா மற்றும் ஏ.ஆர் ரகுமானுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடனங்கள் அமைத்து 2 உறுப்பினர்களை கொண்டு நிகழ்ச்சிக்கு அணி சேர்த்தது, நடன இயக்குனர் ஸ்ரீ கங்கா ரமேஷ். நிகழ்ச்சியை தன் பலகுரல் வல்லமையால் கலகலப்பாக்கினார், மிமிக்கிரி செந்தில். சவுண்ட் எபக்ட், பலகுரல் என நிகழ்ச்சியை களை கட்டினார்.
திறமைகளை வளர்க்க என்றும் ஆர்வம் கொண்ட நம் தமிழ்ச் சங்கம், குணா மற்றும் அனுஷா அவர்களை நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக களம் இறக்கி நிகழ்ச்சிக்கு அழகு சேர்த்தது.
ஆஹா.. என்ன அற்புதம். திரைப்பட புகழ் திரு. கிங்காங் அவர்களின் நடனமும் திரு செந்தில் அவர்களுடன் இணைந்த நிமிடங்களும் அரங்கை சிரிப்பால் கொள்ளை கொண்டது. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் எனும் பழமொழியை நிஜமாக்கி நம்மை இலகுவாக்கிய அவர்களின் மேடை ஆளுமைக்கு ஸ்பெஷல் நன்றிகள்.
கோகுல் நாத் அவர்களின் பல்சுவை நடனம் பார்வையாளர்களின் கரகோஷத்தை பெற்றது. அதில் அற்புதம் என்னவென்றால் அவர் ஏற்பாடு செய்திருந்த உடன் நடனமாடுபவர் தவிர்க்க முடியாத காரணத்தால் வர முடியாமல் போக, அவசரமாய் நம் தமிழ் சங்க உறுப்பினர் சுவேதா நடனமாட ஒப்புதல் தந்தார். 1 மணி நேரமே பயிற்சி என்றாலும் அவர்கள் படைத்த கலை விருந்து நம்மை வெகுவாக மகிழ்வித்தது.
இதன் பின்னர் நிஜ நாயகர்கள் லாரன்ஸ் அவர்களின் நடனக் குழுவினர் 3 பாடலுக்கு நடனமாடினர். கால்கள் இழந்தால் என்ன, முயற்சி இல்லாமலா போனது என அவர்கள் தங்கள் குறைகளுக்கு விடுத்த சவால் நம் கண்ணை நீராலும் மனதை மனித நேயத்தாலும் நிறைத்தது. மனிதன் நினைத்தால் முடியும், உடல் குறை ஒரு பொருட்டல்ல என உலகுக்கு சொன்ன அந்த நடன நிமிடங்கள் புனிதமானவை. உன்னதமானவை, மேன்மையானவை. இந்த மொத்த குழுவுமே முதல் முறையாக கடல் தாண்டி வந்திருப்பதாகவும், மகிழ்ச்சி கொள்வதாகவும், லாரன்ஸ் அவர்கள் பேசியபோது குறிப்பிட்டார். நம் கேப்டன் ரமேஷ் அவர்களையும் அனைத்து உறுப்பினர்களையும் நன்றியுடன் தன் உரையில் நினைவு கூர்ந்தார்.
கார்த்தி (அல் நூர் மாணவர்) அவர்களால் வந்தே மாதரம் பாடப்பட நிகழ்ச்சி இனிதாக நிறைவுற்றது.
நன்றியுரை சுவாமிநாதன் அவர்களால் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்து இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து, நம்பிக்கை சுவரங்கள் என்ற பெயரை யு.எ.இ. தமிழ்ச்சங்கம் காப்புரிமைக்கு விண்ணப்பித்து டிரேட் மார்க்காக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தார்.
குலுக்கல் போட்டி நடத்தப்பட்டு, அதில் வசூலான தொகை முழுவதும் லாரன்ஸ் அவர்களின் குழுவிடம் கொடுக்கப்பட்டது. குமார் மற்றும் உமா தங்கள் பங்களிப்பை லாரன்ஸ் சேரிட்டபிள் டிரஸ்ட்டுக்கு வழங்கினார்கள்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைத்து நடனக் குழுவினருக்கும் அன்பளிப்பு வழங்கி மகிழ்ந்தனர் தியாகராஜா பொறியியல் கல்லூரியின் மதுரை பிரிவை சார்ந்த சிவா மற்றும் குழுவினர்.
குமார் (ICWC), நாராயணன் (பேங்க் ஆப் பரோடா), மருத்துவர் நாராயணன். தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சி அமைய காரணமான ஸ்ரீகங்கா, ப்ராஸ்பர், சித்ரா ப்ராஸ்பர், சுவாமிநாதன், கீதா சுவாமிநாதன் செந்தில்வேலன், சோபன் பாபு, ஜமுனா ஷோபன், ஸ்ரீராம், காமாட்சி ஸ்ரீராம், கதிர் வேல், கீதா கதிர்வேல், பாலாஜிராம், கீதா பாலா, ரவி, விஜயா ரவி, அர்விந்த், சௌக்கியா அர்விந்த், அருண், கோகிலா அருண், கார்த்திக், இம்ரான், ராம்குமார், பாலு, சலாகுதீன், சுந்தர் தம்பி, பிரத்யேக நன்றிகள் பாலா பாலகுமார் (அற்புதமான UTS Presentation பகிர்தலுக்கு)
தன் நெஞ்சின் ஆழத்திலிருந்து நம் கேப்டன் ரமேஷ் சொன்னது இன்னும் ரீங்காரம் செய்கிறது. அதுவே அவர்து வெற்றியையும் வெற்றியையும் சொல்லும் ரகசிய தாரக மந்திரமாய் இருந்தது. எனது குழுவில்லாமல் நானில்லை, என் குழுவில்லாமல் நாங்களுமில்லை.
தகவல் - லாரன்ஸ் பிரபா, யு.ஏ.இ. தமிழ்ச்சங்கம்