900 ஆண்டுகள் பழமையான நரசிம்ம பெருமாள் கோயிலில் ஜூன் 1ல் கும்பாபிஷேகம்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் சிதலமடைந்து காணப்பட்ட 900 ஆண்டுகள் பழமையான நரசிம்ம பெருமாள் கோவில் புனரமைக்கப்பட்டு, வரும் 1ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் தெப்பகுளம் அருகில் நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. சுமார் 900 ஆண்டுகள் பழமையான இக்கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. இதையடுத்து கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோயிலில் திருப்பணிகள் நடத்தப்பட்டு, தற்போது நிறைவடைந்துள்ளது. இதனால் வரும் ஜூன் 1ம் தேதி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இக்கோவிலுக்கு பல சிறப்பம்சங்கள் உள்ளன. இங்கு நரசிம்ம பெருமாள் 16 கரங்களுடன் காட்சி அளிக்கிறார். பொதுவாக கோயில்களில் தெப்பகுளம் வடகிழக்கு திசையில்தான் இருக்கும். ஆனால் நரசிம்ம பெருமாள் கோயிலில் மேற்கு திசையில் அமைந்துள்ளது. மேலும் இந்த தெப்பகுளத்தில் நீராடினால் தோல் நோய் நீக்கும் என்பது ஐதீகம்.
கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று யாகசாலை பூஜைகள் நடத்தபட்டன. தினமும் மாலையில் பஜனை, இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் 1ம் தேதி காலை 6.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு சீனிவாச கல்யாணமும் நடைபெற உள்ளது.கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 45 நாட்கள் மண்டல பூஜை நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் குழுவினர் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications