துபாயில் மதுக்கூர் சுன்னத் வல்-ஜமாஅத் நடத்திய மீலாது பெருவிழா
துபாய்: துபாயில் மதுக்கூர் முஸ்லிம் சுன்னத்-வல்-ஜமாஅத்தின்(M.M.S.J) சார்பாக 10.02.2012 அன்று மாலை தேரா சிறிய ஷெர்வானி பள்ளிவாசல் அருகே புனித மௌலூது ஓதும் நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து மீலாது விழா நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன.
நிகழ்ச்சியை எஸ்.என்.ஏ. புகாரி துவக்கி வைத்தார். எம். அப்துல் காதர் இறைவசனம் ஒதினார். தொடர்ந்து நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த மதுக்கூர் முஸ்லிம் சுன்னத்-வல்-ஜமாஅத்தின் தலைவர் பி.டி.இ.ஏ. ரஹ்மத்துல்லா தனது தலைமையுரையில், அமைப்பினுடைய சமுதாய சேவைகளையும், அமைப்பின் கடந்தகால, நிகழ்கால செயல்பாடுகளையும் சிறப்பாக எடுத்துக் கூறினார்கள். மேலும் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு இது போன்ற விழாக்கள் எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
அமைப்பின் கௌரவ ஆலோசகர் ஏ.எம். இமாமுதீன் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து கண்ணியமிகு செய்யது அலி மௌலானா நபிகளாரின் சிறப்பியல்புகளையும், யூசுப் நபியின் தியாகங்களையும், கலீபா சகாபுதீன் பெருமானார் (ஸல்) அவர்களின் உயர்ந்த அரசியல் பண்புகளையும், 'முஹிப்புல்உலமா' மஃரூப் பெருமானார்(ஸல்) அவர்களின் தலைசிறந்த நற்குணங்களையும் அனைவரும் விளங்கும் வகையில் எடுத்துரைத்தார்கள்.
சிறப்புரையாற்றிய மௌலானா எஸ்.எம்.பி. ஹுசைன் மக்கி மஹ்லரி பெருமானார்(ஸல்) அவர்களின் மனித நற்பண்புகளையும் ஆத்மிக தத்துவங்களையும் விளக்கமாகக் கூறினார்.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக தீனிசைப் பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன், கே.எம்.எம்.ஏ. சாகுல் ஹமீது, ஏ.எம். அப்துல் கைய்யூம் ஆகியோர் பெருமானாரின் மேன்மையை விளக்கும் பாடல்களை பாடினார்கள். புகழ்பெற்ற மர்ஹூம். மதுக்கூர் மஜீது அவர்களின் பாடல்கள் இடம்பெற்ற குறுந்தகடு மறுவெளியீடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவாக அமைப்பின் செயலாளர் கே.எம்.எம்.ஏ. சாகுல் ஹமீது நன்றியுரையாற்ற, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் தப்ரூக் உணவு வழங்கப்பட்டது.