என் தலை கோதும் உன் இரு விரல் போதும்…
ஒரே டென்சன்... எதைப் பார்த்தாலும் எரிச்சல்... யார் என்ன சொன்னாலும் வெறுப்பு என்று நடுத்தர வயது பெண்களுக்கு ஒரு கால கட்டம் வரும். அது மாதவிடாய் நிற்கும் பருவம்.
பொதுவாக சராசரி பெண்ணிற்கு 40 வயதில் மாதவிடாய் முற்றுப் பெறுகிறது இதனை மெனோபஸ் என்கின்றனர். ஒரு பெண் 40 வயதை அடையும் போது உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. இளமை என்பது முடிந்து முதுமையின் சாயல்கள் தென்பட ஆரம்பிக்கும் வயதுதான் 40. இதில் மாதவிலக்கு சில மாதங்கள் வராமல், ஒரு சில மாதங்கள் தொடர்ச்சியாக வந்து என சீரற்று இருப்பதுதான் மெனோபஸ் துவங்குவதன் அறிகுறி. இந்த மெனோபஸ் என்பது உடலை மட்டுமல்ல மனதையும் பாதிக்கும் ஒரு நிகழ்வாகும். சிலருக்கு இந்த மெனோபஸ் மிக இளம் வயதிலேயே ஏற்படுவதும் உண்டு. 32 வயதில் கூட ஒரு சில பெண்களுக்கு மெனோபஸ் ஆகிவிடக் கூடும்.
இந்த சமயத்தில் பெண்களுக்கு மன அளவில் ஒரு அழுத்தம் ஏற்படுகிறது. அவர்கள் மெனோபஸை எதிர்கொள்ள அச்சம் கொள்கிறார்கள். மெனோபஸ் ஆகிவிட்டால் உடலில் பல்வேறு வியாதிகள் வந்துவிடும் என்ற அச்சமும் பலரிடம் நிலவுகிறது. அப்போது வீட்டில் உள்ளவர்கள் கொடுக்கும் அன்பான ஆறுதலான வார்த்தைகளும், செயல்பாடுகளும்தான் பெண்களுக்கு உடல் ரீதியான, மனரீதியான தெம்பினைத் தருகின்றன.
அன்பான கவனிப்பு
மெனோபஸ் பருவத்தில் பெண்களுக்கு கவலை, சோகம், வருத்தம் ஏற்படுவது இயர்பு. அந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதல், அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகளும், அணுசரனையான அக்கறையும்தான்.
பறந்து போகும் கவலை
அன்பாலும், பாசத்தாலும், அக்கறையாலும், பரிவாலும் உங்களது வார்த்தைகளால் அவரது கவலைக்கு நீங்கள் போடும் மருந்து மிகப் பெரிய நிவாரணமாக அமைகிறது. நமக்கென்று ஒரு தோள் இருக்கிறது, நமக்காக ஒரு உயிர் இருக்கிறது, நம்மை தூக்கிச் சுமக்க ஒரு சுமை தாங்கி இருக்கிறது என்ற நினைப்பே பெண்களுக்கு சோர்வையும், சோகத்தையும் தூக்கிப் போட்டு விட உதவுகிறது.
தோள் கொடுங்கள்
மெனோபஸ் பருவத்தை புரிந்து கொண்டு அச்சத்தோடு இருக்கும் மனைவியிடம் ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள். அப்படிய பறந்து போய் விடும் அவரது கவலைகள். மனைவி வருத்தத்திலோ அல்லது கவலையிலோ இருக்கும்போது நீங்கள் அவருக்கு தோள் கொடுத்து நின்று ஆறுதல் அளிக்கும்போது அவருக்குக் கிடைக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் சொல்லில் வடிக்க முடியாதது.
கட்டி அணையுங்கள்
கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் போகும் என்கின்றனர் நிபுணர்கள். எனவே அச்சத்தோடு இருக்கும் மனைவியை அன்பாய், மெதுவாய் கட்டி அணையுங்கள். ஏனெனில் சிலருக்கு கட்டி அணைத்து தோளோடு தோள் சேர்த்து, தலையை வருடிக் கொடுத்து, முதுகைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறும்போது அதை அவர்கள் விரும்புவார்கள்.
இதுவும் கரைந்து போகும்
மெனோபஸ் கால கட்டத்தில்தான் சிலருக்கு தேவையில்லாத பயம், கவலை வந்து மனதை வருத்தும். அதுபோன்ற சமயங்களில் அவர்களை அந்தப் பிரச்சினையிலிருந்து திசை திருப்ப முயற்சியுங்கள். வேறு டாப்பிக் குறித்து அவர்களது சிந்தனையை திருப்புங்கள். அதையே நினைத்துக் கொண்டு பயப்படாதே என்று தட்டிக்கொடுங்கள். அவர்களுக்கு ஊக்கமாக, பக்கபலமாக இருந்து, அவர்களின் பயத்தைப் போக்குங்கள். அவரது மனதுக்கு இதமாக ஏதாவது பேசிக் கொண்டிருங்கள்.
தொந்தரவு தராதீர்கள்
இந்த காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு உடல்ரீதியாக ஒய்வு தேவைப்படுகிறது. பார்ப்பதற்கு அழககாகவும், கவர்ச்சியாகவும் இருந்தாலும் அவர்களது உடல்நிலை தோற்றத்துக்கு மாறாக இருக்கும். எனவே, தாம்பத்ய உறவு தொந்தரவு, மாதவிடாய் தொந்தரவு இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள். ஆனால், கணவர்கள் இதை கண்டு கொள்ளாமல் தொந்தரவு செய்வதால் பெண்களின் மன அழுத்தம் மேலும் அதிகமாகும்.
தலை கோதும் விரல்கள்
சில ஆண்கள் கூட மனைவியிடம் தாம்பத்ய சுகத்தை எதிர்பார்ப்பதில்லை. குறிப்பிட்ட வயதுக்கு மேல் மனைவியை தொந்தரவு செய்வதைவிட, அவளுக்கு ஆதரவாக அன்பால், பாசத்தோடு கவனிக்கும் இருக்கிறார்கள். ஆனாலும், சில நேரங்களில் மனைவி அதற்கு தயார் என்றால் சந்தோசமாக உறவில் ஈடுபடலாம். அதிக வன்முறையை விட ஆறுதலான மென்மையான உறவினைத்தான் இந்த காலகட்டத்தில் பெண்கள் விரும்புகின்றனர்.
தாயுமானவன்
இரவில் மென்மையான பேச்சும், தலை கோதும் விரல்களும் இருந்தால் போதும் அவர்களின் கஷ்டங்கள் எல்லாம் கரைந்து போகும் என்கின்றனர் நிபுணர்கள். அன்பைக் கொட்டி நீங்கள் தரும் ஆதரவு அவருக்கு ஒரு தாயின் மடியைப் போலவே காட்சி தரும். எனவே உங்கள் துணை சோரந்திருக்கும்போது நீங்கள் தாயுமானவனாய் மாறி அவருக்கு இளைப்பாறுதலைக் கொடுங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.