குவைத்தில் கண்ணகி, மாதவி சகிதம் நடந்த பாவேந்தர் கழகம் கவியரங்கம்
குவைத்: பாவேந்தர் கழகம் நடத்திய களம் பத்து நிகழ்ச்சி 05.07.2013 அன்று காலை 9 மணிக்கு மங்காப் பாவேந்தர் அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது. திரு.இராஜசேகரன் மற்றும் திரு.நடராஜன் முன்னிலை வகிக்க நிகழ்ச்சியினை திரு.ப.சேகர் தொகுத்து வழங்கினார்.
தமிழ் வணங்கு நிகழ்ச்சியில் செல்வி. நளினா, ஜெயபார்வதி, சுபஸ்ரீ ஆகியோர் பாடினர். குறளோடு உறவாடு திரு. சூரஜ்குமார், களப்பாடல் திரு. முருகேசன் கதைகேளு கனியாகு நிகழ்ச்சியில் திரு. தண்டாயுதபாணி, மண்ணிசையில் திருமதி. மஞ்சுளா, திரு. முருகேசன், செல்வி. ஜெயபார்வதி ஆகியோர் பங்கு பெற்று பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்கள்.
தேநீர் இடைவேளையைத் தொடர்ந்து நடந்த களத்துமேடு நிகழ்ச்சியில் சிறுவர்கள் கிட்டுஷான், சுபஸ்ரீ, சஞ்சீவ், நளினா, பிரித்திகா, சூர்யா, நவீன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது திறைமைகளை வெளிப்படுத்தி அனைவரது கைதட்டல்களை பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து வேரூன்றா விழுதுகள் என்ற தலைப்பில் திரு. முனு. சிவசங்கரன் சிறந்த கவிதையையும், திராவிட கீதம் என்ற தலைப்பில் திரு. பழ. கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு.விஸ்வநாதன் ஆகியோர் சிறந்த உரை நிகழ்த்தினார்கள். திரு.சேந்தை ரவீந்தர் இம்மாதம் பிறந்தநாள் மற்றும் திருமணநாள் காணும் கழக உறுப்பினர்களுக்கு வாழ்த்தினையும் கொடையாளர்களுக்கு நன்றியினையும் தெரிவித்தார்.
பின்னர் நடந்த கவிதைச்சிறகு நிகழ்ச்சியில் முதற்காவிய மூன்று தமிழர்கள் என்ற தலைப்பில் திரு. சுப்ரமணி அவர்கள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. கோவலன் பற்றி பூவை அப்தாகீரும், கண்ணகி பற்றி திரு. சிவமணியும், மாதவி பற்றி திரு. இராவணனும் மிகவும் சிறப்பாக கவிதை படித்தார்கள்.
இக்கவியரங்கின் சிறப்பம்சமாக கண்ணகியாக செல்வி. ஜெயபார்வதியும், மாதவியாக செல்வி. சுபஸ்ரீயும், கோவலனாக செல்வன். சஞ்சீவும் வேடமணிந்து வந்தது அந்தந்த கதாபாத்திரமாக மாறி வசனம் பேசி அனைவராலும் வெகுவாக ரசிக்கப்பட்டு பாராட்டினை பெற்றார்கள்.
இனிதினும் இனிது நிகழ்ச்சியில் தேசம் திணறி திசை மாறிப் போவது .... அரசியல் மோகத்தாலா? அரசுத்துறை ஊழலாலா? அறிவியல் ஆபத்தாலா? இல்லை எனக்கென்றிருக்கும் மக்களாலா? என்ற தலைப்பில் திரு. இராஜசேகரன் அவர்கள் தலைமையில் பேச்சரங்கம் நடைபெற்றது. திரு.சரவணன் அரசியல் மோகமென்றும், திரு.முருகேசன் அரசுத்துறை ஊழலென்றும், திரு.நடராஜன் அறிவியல் ஆபத்தென்றும், திருமதி.தேவி ரவி எனக்கென்றிருக்கும் மக்களே என்றும் வாதிட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து சொல்வோம் வெல்வோம் தமிழ் கேள்வி பதில் நிகழ்ச்சியை திருமதி. கீதா மற்றும் திரு. முத்துகிருஷ்ணன் நடத்தினார்கள் அதில் திரு. பழ. கிருஷ்ணமூர்த்தி பரிசினை வென்றார். வாழிய செந்தமிழுடன் களம் நிறவடைந்தது. அமுதீதல் நிகழ்ச்சியில் திரு.சுப்ரமணி மதிய உணவு வழங்கி சிறப்பு செய்தார்.