திண்டுக்கல் தலித் பெண்கள் நலத் திட்டங்களுக்கு அமெரிக்கத் தமிழர்கள் 21,000 டாலர் நிதியுதவி
டல்லாஸ்(யு.எஸ்): சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியின் மூலம் திண்டுக்கல் தலித் பெண்கள் நலத்திட்டங்களுக்காக 21 ஆயிரம் டாலர்கள் நிதியுதவி வழங்கப்பட்டது.
டல்லாஸில் செயல்பட்டுவரும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு நிதி திரட்டும் நோக்கத்துடன் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு இர்விங் ஆர்ட்ஸ் சென்டரில் நடைபெற்ற ‘அனுபவம் புதுமை' என்ற நிகழ்ச்சியில் இன்னிசைக் கச்சேரி, நடனங்கள், நாடகம், மேஜிக் ஷோ, குறும்படம் என ஐந்து வெவ்வேறு கலைகளையும் ஒருங்கே கலந்து புதுமையான நிகழ்ச்சியாக வழங்கினார்கள்.
இன்னிசைக் கச்சேரி
பிரபு சங்கர் தலைமையிலான, அமெரிக்காவின் பிரபல High Octavez என்ற இசைக்குழுவினர் இன்னிசை விருந்து படைத்தனர். நியூ ஜெர்ஸி, பிலடெல்பியா உள்ளிட்ட நகரங்களிலிருந்து பாடகர்களும் இசைக்கலைஞர்களும் பங்கேற்றனர்.
ஆயிரத்தில் ஒருவன், வெள்ளிவிழா படத்தின் காதோரம் தான் நான் பேசுவேன் உள்ளிட்ட பழைய பாடல்கள் முதல், கோச்சடையான் வரையிலான புதிய பாடல்களையும் கலவையாக வழங்கினார்கள். இசைக்கச்சேரிக்கு நடனம் அமைத்திருந்தது வித்தியாசமாக இருந்தது.
ஐநா பெருமைப்படுத்திய செட்டிநாட்டு கிராமங்கள்
ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் தமிழகத்தின் செட்டிநாட்டு பகுதியை சார்ந்த 73 கிராமங்களை உலகின் பாரம்பரிய நினைவுச் சின்னங்களாக ‘World Heritage List ல் சேர்த்துள்ளனர். அந்த தகவலை மையமாகக்கொண்டு, அங்குள்ள ஒரு அரண்மனை பொக்கிஷங்களை அருங்காட்சியமாக அறிவிப்பது போன்ற பின்னணியில் முழு நிகழ்ச்சியையும் வடிவமைத்திருந்தார்கள்
அரசு விழாவில் கலை நிகழ்ச்சிகள்
சுதந்திர தினத்தில் முதலமைச்சர் அருங்காட்சியகத்தை திறந்து வைப்பது போலவும், அதற்காக அங்கே இசைக் கச்சேரியுடன் நடனங்கள் நடைபெறுவதுமாக நிகழ்ச்சி ஆரம்பமானது. வீரபாண்டி கோட்டையிலே பாடலுக்கு மிகவும் வித்தியாசமான நடனம் அமைத்திருந்தார்கள். அந்த நடனக்குழுவில் புகுந்த திருடர்கள் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற பிறகு, அதனை கண்டுபிடிக்கும் காவல்துறையினர், இடையிடையே நாடகமாக நிகழ்ச்சியை நகைச்சுவை கலந்து நடத்திச் சென்றனர். உடன் தாத்தா பாட்டி, காதலன் காதலி கேரக்டர்களும் உண்டு.
அற்புத விளக்கும் பூதம் ஜீனியும்
திருடர்கள் வழியில் பூங்காவில் விட்டுச்சென்ற அற்புதவிளக்கை காவலரின் மகன் சிறுவன் ரஹமத் தொடவும் அங்கே ஜீனி என்ற பூதம் கிளம்புவதுமாக கிளைக்கதையும் இருந்தது. ஜீனி பல மேஜிக் காட்சிகளை செய்தி அசத்தியது. இந்திய அளவில் விருதுகளைப் பெற்ற, தமிழகத்தை சார்ந்த மேஜிக் நிபுணர் செந்தில் (மேஜிக் சென்) ஜீனி வேடத்தில் வந்து மேஜிக் ஷோ நடத்தினார். மேஜிக் கலையில் அமெரிக்காவில் ஆராய்ச்சிப் பட்டம் படித்து வரும் முதல் இந்தியர் இவர்.
அஞ்சலி படத்தை விட அதிக குழந்தைகள்
மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் ஏராளமான குழந்தைகள் நடித்திருந்தார்கள். அதை விடவும் அதிகமாக, அனுபவம் புதுமை நிகழ்ச்சியில் 75க்கும் மேற்பட்ட தமிழ்க் குழந்தைகள் பங்கேற்றனர். அஞ்சலி படத்தின் வேகம் வேகம் பாடலுக்கு சின்னஞ்சிறு குழந்தைகளின் நடனத்துடன் கேலக்ஸி மற்றும் பறக்கும் கம்பளம் (Flying Carpet) பிரமிப்பூட்டியது.
ஐந்து நடன ஆசிரியைகள்
அன்னம், புவனா, கல்பனா, ஹேமா மற்றும் பிரதிபா ஆகிய ஐந்து நடன ஆசிரியைகள் நடனங்களை அமைத்திருந்தனர். ஆசிரியை பிரதிபாவின் சிறப்பு நடனம், ‘விஸ்வரூபம்' படத்தின் உன்னைக்காணாமல் பாடலுக்காக இடம்பெற்றது.
கரகாட்டமும் நாட்டுப்புற நடனங்களும்
தலையில் கரகத்துடன் 'முந்தி முந்தி விநாயகரே' பாடலுக்கு ஆசிரியை கல்பனா அசத்தல் ஆட்டம் ஆட, வயசு வாரியாக குழந்தைகளோ அத்திந்தோம் சந்திரமுகிப் பாடல், மழைத்துளி மழைத்துளி மற்றும் சொய்ங் சொய்ங் பாடல்களுக்கு நாட்டுப்புற நடனங்களில் பிரமிக்க வைத்து விட்டனர்.
குறும்படத்தில் நாடகத்தின் க்ளைமேக்ஸ்
திருடர்கள் போலிஸிடம் எப்படி பிடிபட்டார்கள் என்பதை விறுவிறுப்புடனும், சண்டைக்காட்சிகளுடனும் குறும்படமாக எடுத்து பெரிய திரையில் திரையிட்டார்கள். திடிரென்று வந்த திரைப்படம் மற்றும் எதிர்பாராத திருப்பம் என பார்வையாளர்கள் ஆச்சரியத்தில் திக்குமுக்காடி விட்டனர். இந்த நிகழ்ச்சியை வடிவமைத்து, ஒருங்கிணைத்து குறும்படத்தையும் இயக்கிய ராஜாமணி 'இன்டர்போல் அலெக்ஸ்' வேடத்திலும் அசத்தி விட்டார்.
முதலமைச்சரும் சுதந்திர போராட்ட தாத்தாவும்
முதலமைச்சர் உரையைத் தொடர்ந்து, சுதந்திரப் போராட்டத்தை நினைவுகூறும் வகையில் இறுதிக் காட்சிகளும் நடனங்களும் அமைந்திருந்தன. காவலராக வந்த 'மோனி' யின் தாத்தா சுப்பிரமணியம் பிள்ளை நெல்லை மாவட்டத்தில் வெள்ளையர்களின் கண்ணில் மண்ணைத் தூவி, நூதன முறையில் சுதந்திரப்போராட்டத்தை நடத்தி சிறைக்கொடுமைகளை அனுபவித்தவர். அதை நினைவுகூர்ந்து அவர் பேசிய இறுதிக் காட்சியின் வசனங்கள் மிகவும் உணர்ச்சிமயமாக இருந்தது.
வ.உ.சி, திருப்பூர் குமரனுடன் பாரதியார்
மேடையில் கப்பலில் வந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், கொடிகாத்த குமரன், பாரதியார் காட்சிகளுடன் தமிழா தமிழா, மனிதா மனிதா (கண் சிவந்தால் மண் சிவக்கும்) பாடல்கள் சுதந்திர போராட்டத்தையும், கப்பல் ஏறிப் போயாச்சு, அச்சம் அச்சம் இல்லை பாடல்கள் சுதந்திரத்தை போற்றுவதாகவும் நடனங்கள் அமைக்கப் பட்டிருந்தது.
மேரிலாண்ட் துணைச் செயலாளர் ராஜன் நடராஜன்
மேரிலாண்ட் துணைச்செயலாளர் டாக்டர் ராஜன் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். சாஸ்தா தமிழ் அறக்கட்டளைக்கு மேரிலாண்ட் கவர்னரின் பிரகடனத்தையும் வழங்கினார். உதவும் கரங்கள் அமைப்பிற்கு, டைம் விருது பெற்ற முருகானந்தத்தின், சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் மெஷின்கள் மற்றும் நலத்திட்டங்களுக்கான 40 ஆயிரம் டாலர்கள் நிதியுதவியை விஸ்வநாதன் பெற்றுக் கொண்டார்.
சக்தி கலைக் குழுவுக்கு 21 ஆயிரம் டாலர் நிதியுதவி
திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினருடன் இணைந்து பணியாற்றும் அமெரிக்கப் பேராசிரியர் ஸோயி செரனியன், தலித் பெண்கள் மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட 21 ஆயிரம் டாலர் நிதியுதவியை பெற்றுக்கொண்டார்.86 ஆயிரம் டாலர்கள் திரட்டப்பட்ட நிலையில், செலவு தவிர்த்த மீதம் 5 ஆயிரம் டாலர்கள் அமெரிக்க அளவில் நடத்தப்படும் திருக்குறள் போட்டிக்காக வழங்கப்பட்டது.
இருநூறு தொண்டர்கள்
திட்டமிடுதல் உள்ளிட்ட பல்வேறு ஒருங்கிணைப்பு பணிகளை ரம்யா கவனித்துக் கொண்டார். ஆடியோ, வீடியோ, போட்டோக்ராபி, டெக்னிகல், நிதிக்குழு, விழாமலர் குழு, உணவுக்குழு, மேடை ஒருங்கிணைப்பு, அரங்கப் பொருட்கள், நடனக்குழு, நாடகக்குழு என பல்வேறு குழுவினராக சுமார் இருநூறு பேர் கொண்ட தன்னார்வத் தொண்டர்கள், கைதேர்ந்த வல்லுனர்கள் போல் மிகவும் நேர்த்தியுடன் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
நம்பிக்கைத் தமிழர்கள்
நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை சுமார் ஆயிரம் பார்வையாளர்கள் கரவொலியுடன் கண்டுகளித்துக் கொண்டிருந்தனர். ஒருமித்த கருத்துடன் இணைந்து செயல்படும் தமிழர்கள் எந்த சாதனையும் அடைய முடியும் என்ற நம்பிக்கையை இந்த நிகழ்ச்சி தந்தது. சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் இயக்குனர்கள் வேலு ராமன் மற்றும் விசாலாட்சி வேலு தலைமை ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர்.