அஜ்மானில் இஐஎப்எப் நடத்திய “நலமான குடும்பம் வளமான எதிர்காலம்” நிகழ்ச்சி!
அஜ்மான்: கடந்த 10.04.2015 அன்று எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரம் (இஐஎப்எப்) நடத்திய "நலமான குடும்பம் வளமான எதிர்காலம்" (Healthy Family Wealthy Future) குடும்ப சங்கம நிகழ்ச்சி அஜ்மானில் உள்ள ஹபீதத் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் முஹம்மது தாஹா அவர்களும், சேப் கேஜ் நிறுவனத்தின் மனிதவளத்துறைத் தலைவர் எம்.எம். ஹாஜா அலாவுதீன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
மாலை 3.30 மணியளவில் குழந்தைகளுக்கான போட்டிகள் ஆரம்பமாயின. 5-7 வயது குழந்தைகளுக்கான கிராஅத் போட்டி, 8-9 வயது குழந்தைகளுக்கான கிராஅத் போட்டி, வினாடி வினா போட்டி ஆகியவை சிறப்பாக நடந்தன. கிராஅத் போட்டிகளை பொறியாளர் அப்துல் கஃபூர் அவர்கள் நடுவராக இருந்து நடத்தித் தந்தார். வினாடி வினா போட்டியை பொறியாளர் எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்கள் நடத்தித் தந்தார்.
மாலை 6 மணியளவில் முக்கிய நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. "குடும்பத்தை ஆரோக்கியமாக மாற்றுவது எப்படி?" என்ற தலைப்பில் டாக்டர் முஹம்மத் இஸ்மாயீல் பி.பி.டி., எம்.எஸ்சி.. (துபாய் ராஷித் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்) அவர்கள் சிறப்பாக பவர்பாயிண்ட் காட்சி மூலம் விவரமாக எடுத்துரைத்தார். இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் சிறிய சிறிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, உடலை ஆரோக்கியமாகப் பேணுவது எப்படி என்பதை அவர் சுவைபட எடுத்துரைத்தது பார்வையாளர்கள் அனைவரையும் பெரிதும் கவர்ந்தது.
மஃக்ரிப் இடைவேளைக்குப் பிறகு உடற்பயிற்சி டெமோ நடைபெற்றது. முக்கியமான எளிய யோகாசனங்களை செய்யது அப்துல்லாஹ் அவர்கள் விளக்கிக் கூற, நான்கு சகோதரர்கள் அதனை அழகுற மேடையிலேயே செய்து காண்பித்தனர். இது பார்வையாளர்களைப் பரவசத்தில் அப்படியே கட்டிப் போட்டது.
இது முடிந்தவுடன் "குடும்பப் பிணைப்பு" என்ற தலைப்பில் பொறியாளர் தமீம் மன்சூர் அவர்கள் உரையாற்றினார். இஸ்லாம் குடும்ப உறவுகளைப் பேணுவதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை அவர் தனது உரையில் எடுத்துக் கூறினார்.
அதன் பின்னர் "நலமான குடும்பம் வளமான எதிர்காலம்" என்ற தலைப்பில் முஹம்மத் ஸாதிக் அவர்கள் மிக சுவாரஸ்யமாக உரையாற்றினார். "இன்று நமது வாழ்க்கை ஓட்டம், ஓட்டம் என்று ஒடிக்கொண்டே இருக்கிறது, மரணம் வரை இந்த ஓட்டம் தொடர்கிறது" என்று தொடங்கிய அவர், பவர்பாயிண்ட் காட்சிகள் மூலம் பல உதாரணங்களைக் கூறி இந்த ஓட்டத்திலும் குடும்பத்தை மன உளைச்சலின்றி, மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது எப்படி என்று சிறப்புரையாற்றினார்.
ஆரோக்கியமான வாழ்வு குறித்த விழிப்புணர்வைப் பெறுவதற்காக அமீரகத்தில் நல்ல பல சமூகப் பணிகளைச் செய்து வரும் எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரம் வெகு சிறப்பாக இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த இனிய மாலை நிகழ்ச்சியில் அமீரகவாழ் தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் திரளாகப் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்துத் தந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பயனுள்ள பரிசுகள் வழங்கப்பட்டன. மொத்த நிகழ்ச்சியையும் பொறியாளர் எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்கள் தொகுத்து வழங்கினார்.