For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலிங்கம் காண்போம் - பகுதி 59 - பரவசமூட்டும் பயணத்தொடர்

By Ka Magideswaran
Google Oneindia Tamil News

-கவிஞர் மகுடேசுவரன்

உதயகிரியிலிருந்து வெளியே வந்தவுடன் நமக்கான பகிர்தானிழுனி ஒன்றைத் தேடினோம். கேரளத்தைப் போன்றே புவனேசுவரத்திலும் பகிர்தானிழுனிகளே மக்கள் போக்குவரத்தைக் கட்டி மேய்க்கின்றன. மாநிலத் தலைநகர்க்குள்ளேயே பேருந்துப் போக்குவரத்து சிறப்பாக இருந்ததாகச் சொல்ல முடியாது. நல்ல வேளை, ஈருருளிப் பெருக்கம் ஏற்பட்டமையால் ஒவ்வொரு குடும்பத்தாரும் ஆளுக்கொரு வண்டி வாங்கிக்கொண்டு விரைகின்றனர். என்னுடைய கணிப்பின்படி தொண்ணூறுகள் வரைக்கும் இவ்வூரும் மாநிலமும் பத்து விழுக்காட்டளவுக்குக்கூட தம் பழைமைபொலிவிலிருந்து மாறியிருக்க மாட்டா. ஆனால், இன்னொரு பார்வையில் நம்மூரைவிட அவ்வளவுக்கொன்றும் பழுதில்லா ஊர்தான் இஃது என்றும் தோன்றுகிறது.

exploring- odissa kalingam 59

இப்போது நண்பகல் ஆகிவிட்டமையால் அடுத்து ஓரிடத்திற்குச் சென்று சேர்ந்து சுற்றினாலே பொழுதாகிவிடும். இன்றைக்கு இவ்வளவுக்குத்தான் நேரமிருக்கிறது. புவனேசுவரத்தின் இணைநகரமான கட்டாக் வரைக்கும் சென்றுவிட்டு நகரத்தை ஒரு சுற்றேனும் சுற்றி வருவது திட்டம். கட்டாக்கின் புறநகர்ப் பகுதிக்குச் சென்றால் மகாநதியானது பரவி ஓடிக்கொண்டிருக்கும். அங்கே ஒரு படித்துறையைக் கண்டுபிடித்தால் அப்பெருநதியில் நீராடலாம் என்பது நினைப்பு. காலந்தாழ்த்தாமல் விரைந்து வண்டி பிடிக்க வேண்டும்.

பகிர்தானிழுனியார் ஒருவர் அகப்பட்டார். “கட்டாக் வரைக்கும் போக வேண்டும். கட்டாக் போகின்ற பேருந்துகள் நிற்கும் இடத்தில் கொண்டுபோய் விடவும்” என்று கேட்டுக்கொண்டோம். அவர்தான் வாயில் காரப்புகையிலையையோ புகையிலைப்பொடி தூவிய பாக்கினையோ மென்று அதக்கிக்கொண்டிருப்பவராயிற்றே… ஏறுங்கள் என்று தலையாலேயே கட்டளையிட்டு ஏற்றிக்கொண்டார்.

exploring- odissa kalingam 59

உதயகிரியிலிருந்து புவனேசுவரத்தின் நடுப்பகுதிக்கு வருவதற்கு ஐந்து கிலோமீட்டர்கள்தாம். புவனேசுவரத்தின் வானூர்தி நிலையத்திற்கு அருகில் இருக்கும் குன்றுகள்தாம் உதயகிரி கந்தகிரிக் குன்றுகள். வானூர்தி பிடித்து புவனேசுவரம் செல்பவர்கள் நேராக ஊருக்குள் செல்லாமல் காரவேலன் கல்லெழுத்துகளைப் பார்த்துவிட்டே செல்லலாம்.

புவனேசுவரம் நகரத்தின் நடுச்சாலை வழியாக தானிழுனி விரைந்தது. நகரத்தின் நல்லழகுகளைப் பார்த்துக்கொண்டே வந்தேன். புவனேசுவரத்திற்குள் செல்லும் நடுச்சாலை என்பது பூரிக்கும் கட்டாக்குக்கும் செல்லும் சாலையாகும். எப்படிச் சென்னையின் நடுச்சாலை துறைமுகத்திற்கும் செங்கல்பட்டுக்கும் செல்கிறதோ, சேலத்தின் நடுச்சாலை நாமக்கல்லுக்கும் பெங்களூருக்குமானதோ அப்படிப்பட்டது அது.

exploring- odissa kalingam 59

புவனேசுவரத்திலிருந்து கட்டாக் செல்வதற்கு எங்கேனும் பேருந்து நிலையத்தில் கொண்டுபோய் விடப்படுவோம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், தானிழுனியார் நேராகவே கட்டாக் நகரம் செல்லும் வழியிலேயே சென்றார். கட்டாக்குக்கே சென்று விடுவாரோ என்று அவரைக் கேட்கையில் வாய்மென்ற பாக்குக்குழம்போடு “உம் உம்” என்று நம்மை அமர்த்தினார். எதுவாயினும் சொல்லிவிட்டுச் செய்யுங்கள் ஐயா… நீங்கள் பாட்டுக்கு எதையேனும் செய்தால் ஊர்பேர்மொழி தெரியாத இடத்தில் சற்றே பதைப்பாக இருக்கும்தானே ?

exploring- odissa kalingam 59

நகரத்தின் சந்தடிகள் குறைந்த புறநகர்ப் பகுதியொன்றில் வண்டியை ஓரமாகத் திருப்பி நிறுத்தினார். இங்கேயே இறங்கிக்கொள்ளலாம் என்பதுபோல் சைகை காட்டினார். அது பேருந்து நிலையமில்லை. கட்டாக்கை நோக்கிச் செல்லும் நால்வழிச்சாலையின் நிறுத்தப் பகுதி. அங்கே இறங்கி எப்படிச் செல்வது ? வாயெச்சிலைத் துப்பிவிட்டு வந்து அவர் சொன்னவற்றிலிருந்து நாம் விளங்கிக்கொண்டது. “கட்டாக் செல்வதற்கு இங்கேதான் பேருந்து பிடிக்க வேண்டும். புவனேசுவரத்திற்கும் கட்டாக்குக்கும் சிற்றுந்து வகையிலான தனியார்ப் பேருந்துகள்தாம் மிகுதியாகச் செல்கின்றன. அவற்றில் ஒன்றில் ஏறினால் கட்டாக் பேருந்து நிலையத்தில் கொண்டுபோய் விட்டுவிடுவார்கள். அதோ… அங்கே நிற்கிறதே ஒரு சிற்றுந்து… அது கட்டாக் செல்கிறது. ஓடுங்க ஓடுங்க… போய் ஏறிக்கங்க….”

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 , 48, 49, 50,51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60]

English summary
Travel Series about Odissa, Kalingam, Historic Places
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X