துபாயில் இலவச மருத்துவ முகாம்: 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
துபாய்: துபாய் ஈமான் அமைப்பு பிரைம் மெடிக்கல் சென்டருடன் இணைந்து ஈடிஏ எம்.பி.எம். சோனாப்பூர் தொழிலாளர் முகாமில் 21.03.2014 அன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை இலவச மருத்துவ முகாமினை நடத்தியது.
மருத்துவ முகாமின் துவக்கமாக அலுவலக மேலாளர் ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓதினார். ஈமான் அமைப்பின் கல்விக்குழுத் தலைவரும், துணைத்தலைவருமான அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா தலைமை வகித்தார். அவர் தனது உரையில் ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் சமூக நலப்பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கி வரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
மருத்துவ முகாமினை இந்திய துணை கன்சல் ஜெனரல் மதுரை அசோக் பாபு துவக்கி வைத்தார். அவர் தனது உரையில், ஈமான் அமைப்பு துபாய் அரசின் கம்யூனிட்டி டெவலப்மென்ட் அத்தாரிட்டியின் அனுமதி பெற்ற பின்னர் முதலாவதாக நடத்தப்படும் மருத்துவ முகாம் தொழிலாளர்களுக்கென்று பிரத்யேகமாக நடத்தப்படுவதற்கு பாராட்டு தெரிவித்தார்.
துபாய் அரசின் கம்யூனிட்டி டெவலப்மென்ட் அத்தாரிட்டி லைசென்சிங் தலைவர் பழனி பாபு ஈமான் அமைப்பு மக்களுக்காக மேற்கொண்டு வரும் சமுதாயப் பணிக்கு தங்களது துறை எல்லா வகையிலான ஒத்துழைப்பும் நல்கும் என்றார்.
துபாய் இந்திய கன்சுலேட்டின் தொழிலாளர் மற்றும் நலத்துறை அலுவலர் ராஜேஷ் துக்கால், ஈடிஏ ஹெச்.ஆர்.எம். டிவிஷன் எக்சிகியூட்டிவ் டைரக்டர் எம். அக்பர் கான், எம்.பி.எம்.பொது மேலாளர் பி.எஸ்.எம். ஹமீது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசும், பொன்னாடையும் வழங்கியும் கௌரவிக்கப்பட்டது.
சமூக விழிப்புணர்வு பணிகளுக்காக ஷேக் ஹம்தான் விருது பெற்ற தமிழக மாணவர் பெரியபட்டணம் ஹுமைத் அபுபக்கர், ஆகாஷ் அருள் ஆகியோர் புகைப்பழக்கம், குடிப்பழக்கம் உள்ளிட்ட சமூகத் தீமைகள் குறித்த பதாகைகளை தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் செய்திருந்தனர். அவர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
துணைப் பொதுச்செயலாளர் ஏ முஹம்மது தாஹா நன்றி கூறினார்.
மருத்துவ முகாமில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பொது மருத்துவம், ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை டாக்டர் மூர்த்தி தலைமையிலான குழுவினர் பரிசோதித்து மருந்துகளை வழங்கினர்.
ஈமான் விழாக்குழு செயலாளர் ஹமீது யாசின் தலைமையிலான குழுவினர் மருத்துவ முகாம் சிறப்புற நடைபெறுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.