500 ஆய்வுக் கட்டுரைகள்.. உலக அறிஞர்கள் பங்கேற்பு.. ஜமால் முகமது கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்
திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் பங்கேற்கின்றனர்.
திருச்சி: திருச்சியில் அமைந்துள்ள ஜமால் முகமது கல்லூரியும், சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையும் இணைந்து "தமிழ் இலக்கியங்களில் சமுதாயச் சிந்தனைகள்" என்னும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கத்தை வரும் புதன் கிழமை நடத்துகின்றன.
இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக, சிங்கப்பூரைச் சேர்ந்த இக்சியா தொடர்பகத்தின் இயக்குநர் இரவிச்சந்திரன் சோமு கலந்து கொள்கிறார். எழுத்தாளர் மாலன் கருத்தரங்கைத் தொடக்கி வைக்கிறார். சிங்கப்பூரைச் சேர்ந்த முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் நிறுவனர் எம்.எ. முஸ்தபா கருத்தரங்க ஆய்வுக் கோவைகளை வெளியிடுகிறார். தி சிராங்கூன் டைம்ஸ் ஆசிரியர் எழுத்தாளர் ஷாநவாஸ் கருத்துரை வழங்குகிறார்.
கல்லூரி முதல்வர் முனைவர் முகமது சாலிகு தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் மீ.அ.ச. ஹபிபூர் ரஹ்மான் வரவேற்புரையும், கல்லூரிச் செயலர் முனைவர் காஜா நஜீமுதீன் சாஹிப் வாழ்த்துரையும் வழங்க உள்ளனர்.
500 ஆய்வுக் கட்டுரைகள்.. உலக அறிஞர்கள் பங்கேற்பு.. ஜமால் முகமது கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம் pic.twitter.com/Ao578PuUHL
— Oneindia Tamil (@thatsTamil) January 9, 2017
கருத்தரங்கில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் ஆய்வுக் கட்டுரைகளை வழங்க உள்ளனர். ஆய்வரங்க அமர்வுகள் தனித்தனி அமர்வுகளாக நடைபெறும் மாலையில் நடைபெறும் நிறைவு விழாவில் பன்னாட்டுக் கருத்தரங்கின் மதிப்பீட்டு உரையைப் புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் வழங்குகிறார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் க. பாஸ்கரன் நிறைவு உரையாற்ற உள்ளார்.
ஜமால் முகமது கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்துள்ள இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கின் இறுதியாக கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் க. சிராஜூதீன் நன்றியுரையாற்றுகிறார்.