கந்த சஷ்டி: சுவிட்சர்லாந்தின் பேர்ன் நகரில் சூரசம்ஹாரம்
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதுபோல, தமிழ் கடவுளாம் முருகப்பெருமான் இருக்கும் இடமெங்கும் கந்தசஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பேர்ன்: சுவிட்சர்லாந்து பேர்ன் நகரில் வடிவேலன் பெருநோன்பு கந்தசஷ்டி திருக்கொடியேற்றத்துடன் வெம்முக ஆண்டு ஞானவடிவேலன் திருவிழா 31. 10. 2016 திங்கட்கிழமை முதல் 06. 11. 2016 ஞாயிற்றுக்கிழமை வரை அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் ஆறு நாட்கள் முருகப்பெருமான் பெருந்திருநோன்பு கந்தசஷ்டி தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. தமிழ்கடவுள் முருகப்பெருமான் வாழும் இடங்களில் எல்லாம் சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
செந்தமிழ்த் திருமறைத் திருக்கோவிலாம் அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் மிகுசிறப்புடன் செந்தமிழ்த்திருமறையில் முருகப்பெருமான் திருவிழாவாக திருக்கொடியேற்றத்துடன் நோற்கத் திருவருள் நிறைந்துகூடி நாளும் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்தில் எழுந்தருளி திருவருள் பொழியும் தெய்வங்களுக்கு சிறப்பு திருமுழுக்கும், வழிபாடுகளும் நடைபெற்று ஞானலிங்கபாலனிற்கு ஆறுநாளும் பெருஞ்சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
வடிவேலன் திருவுலா
திருமுழுக்கு முதல் அனைத்து வழிபாடுகளிலும் அடியார்கள் நேரடியாகப் பங்கெடுத்து, தமிழ்க்கடவுள் திருவருளை தாய்மொழியில் கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாடு ஆற்றும் திருக்கோவிலில் மிகு நிறைவாக பெற்று மகிழ்ந்துய்யலாம். ஞானக்குறத்தியுடன் ஞானவள்ளி மணாளன் ஞானவடிவேலன் ஆறுநாளும் ஆறுபடைக்கடவுள் திருவுருதாங்கித் திருவுலா வந்தருளினன்.
பக்தர்கள் நோன்பு
திருவிழாக்காலத்தில் ஈழமணிநாட்டில் இருந்து வருகை நல்கியிருக்கும் கலைஞர்கள் திருநிறை. மதுசூதுனன் குழுவினர் மங்கள இசை நல்கினர்.
நோன்பு நோற்கும் பலநூறு அடியார்கள் நோன்புக்காப்பு திருக்கோவிலில் பெற்றனர். அடியார்களுக்கு நாளும் தமிழர் மரபுவழியில் பானாக்கம், பாலும் பழமும் ஐந்தமிழ்தாக வழங்கிப் பெருமானிற்கு படைக்கப்பட்டு, முதலமுது அருளமுதாக அடியார் பெருமக்களுக்கு வழங்கி வழிபாடுகள் நிறைவுற்றன.
வேல்வழங்கல் விழா
04. 11. 2016 வெள்ளிக்கிழமை வேல்வழங்கல் விழாவும் அதனைத் தொடர்ந்து ஆறுமுகப்பெருமான் திருத்தேர் ஏறி பேர்ன் நகரின் ஐரோப்பாத்திடலை திருவலம்வந்த அருட்காட்சியும் நடைபெற்து.
சூரசம்ஹாரம்
05. 11. 2016 சனிக்கிழமை குளிரையும் பொருட்படுத்தாது ஐரோப்பத்திடலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான அடியார்கள் முறலில் ஆணவத்தை அளித்து அறிவைப் படைத்த சூரன்போர் வெகு சிறப்பாக நடைபெற்றது. செந்தூர் முகனாக ஞானலிங்கபாலன் எழுந்தருளி சூரன் ஒறுப்பு நடைபெற்றது.
திருக்கல்யாணம்
06. 11. 2016 ஞாயிற்றுக்கிழமை காலை 04.00 மணிக்கு தமிழ்வேள்வியுடன் பாறணை வழிபாடு தொடங்கப்பெற்றது. 07.00 மணிக்கு வழிபாடுகள் நிறைவுற்று முதலமுது திருவருளமுதாகப் படைக்கப்பெற்று ஆறுமுகப்பெருமானிற்கு ஆறுவகை அருளமுது படைக்கப்பெற்று பல்சிறப்புடன் ஏழு வகை அறுசுவை உணவு அடியார்களுக்கு அளித்து மகேச்சுரவழிபாட்டுடன் வழிபாடுகள் நிறைவுற்றன. மாலை திறைதிருமணம் நடைபெற்று வெம்முக ஆண்டு முருகப்பெருமான் திருவிழா வழிபாடுகள் நிறைவுற்றன.தமிழ்க்கடவுளைத் தாய்மொழி வழிபாட்டில் தாமே நேரல் வழிபட்டு அடியார்கள் உள்ளம் நிறைந்தது, இறையின்பம் என்பதை உணரத்துவதாக அமைந்திருந்தது.