துபாயில் நடந்த கதைத்தமிழ் 13-வது அனைத்துலக ஆய்வு மாநாடு
துபாய்: துபாயில் கதைத்தமிழ் 13-வது அனைத்துலக ஆய்வு மாநாடு 15.05.2015 அன்று நடைபெற்றது.
மாநாட்டை வானலை வளர்தமிழ், அஜ்மான் அமீரக தமிழர்கள் அமைப்பு மற்றும் திருவையாறு கல்விக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தின. வானலை வளர்தமிழ் அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். அஜ்மான் அமீரக தமிழர்கள் அமைப்பின் தலைவர் அஜ்மான் மூர்த்தி, சங்கமம் தொலைக்காட்சியின் கலையன்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவையாறு கல்விக்கழகத்தின் அமர்சிங் சிறப்புரை நிகழ்த்தினார். கைத்தமிழின் மரபும், மாண்பும் எனும் தலைப்பில் கருத்தரங்கம், தமிழர்களின் இன்றைய வாழ்க்கைக்குப் பெரிதும் மகிழ்ச்சியைத் தருவது இசைத்தமிழே அல்லது கதைத்தமிழே எனும் தலைப்பில் பட்டிமன்றம், டாக்டர் வெ. சொக்கலிங்கத்தின் இதயம் காக்க, கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் நபிகள் நாயகம், கல்கியின் சிவகாமியின் சபதம் ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியர் மருத்துவர் வெ. சொக்கலிங்கம் இதயம் காக்க - இதயம் சொல்லும் கதைகள் எனும் தலைப்பில் காட்சி வழி கருத்துரை வழங்கினார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்புல முதன்மையர் முனைவர் பா. மதிவாணன் கதைக்கலைச்செம்மல் விருதினை காவிரிமைந்தன் மற்றும் ஜியாவுதீன் ஆகியோருக்கு வழங்கினார்.
சென்னை சுர்திலய வித்யாலயா நாட்டியப்பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், முனைவர் எல். மேகலா, காவிரிமைந்தன் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர்.
விழாவில் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.