சுயநலத்தின் குழந்தைதான்.. தவறுகள்!
- எழுத்தாளர் லதா சரவணன்
தவறுதல் மனித இயல்பு என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் அது அறியாமல் செய்யும் பிழைக்குத்தான். இப்போது பலர் அறிந்தே சில தவறுகளைச் செய்கிறோம். ஒருவர் வேகமாக சாலையில் போகிறார். அங்கே பாதுகாப்பிற்கு ஆள் இல்லை என்று தெரிந்ததும், தவறான பாதையில் கடக்கிறார். அதை கவனிக்கும் போக்குவரத்து அதிகாரி சில நூறு ருபாய்க்காக அவரை விட்டு விடுகிறார். இங்கே ஒழுங்கீனமாக கருதப்படும் அனைத்துமே தவறுகள் தானே. இதனால் யார் யார் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை, நாம் காப்பாற்றப்படுகிறோமா ?
இப்படி சுயநலத்தின் குழந்தையாய் பிறக்கிறது தவறுகள். அது ஒரு விவாதமேடை, ஒரு ரயில் தண்டவாளத்தில் ரயில் வராத இடத்தில் ஒரு குழந்தை விளையாடுகிறது. மற்றொரு தண்டவாளத்தில் 10 குழந்தைகள் விளையாடுகிறது. அங்கே தூரத்தில ரயில் வருகிறது. இப்போது உங்களிடம் டிராக் மாற்றும் கருவி இருக்கிறது நீங்கள் யாரைக் காப்பாற்றுவீர்கள் என்பதுதான் அந்தக் கேள்வி ?
அப்போது ஒருவர் சொல்கிறார் நான் அந்த ஒரு குழந்தை இருக்கும் பக்கம் தான் டிராக்கைத் திருப்பிவிடுவேன், ஒர உயிரைப் பார்த்தால் பத்து உயிர்கள் போய்விடுமே என்று! இப்படித்தான் செய்யாத தவறுக்காக தண்டிக்கப்படுவர்கள் அதிகம். அந்த 10 குழந்தைகளும் வண்டி வரும் என்று தெரிந்தே தவறு செய்தவர்கள் ஆனால் அவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள். எத்தனை முரண்பாடுகள் வாழ்வில் !
ஒரு திரைப்படக்காட்சி கல்லூரி வகுப்பை கட் செய்துவிட்டு திரைப்படம் பார்க்கப்போகும் மாணவர்கள் திரும்பி வரும்போது டிக்கெட்டை கிழித்துப் போடுவார்கள். தவறு செய்யலாம், ஆனால் மாட்டிக்கொள்ளக் கூடாது. அதாவது செய்யும் தவறுக்கு சாட்சிகள் இல்லையென்றால் அது தவறே இல்லையென்று பொருள் என்று தவறுக்கு ஒரு இலக்கணம் வகுத்துக் கொள்கிறார்கள்.
கஷ்டப்பட்டு தன் பிள்ளைகளுக்காக பொரூளீட்டும் தந்தை, ஊதாரியான மகன், குடும்பத்திற்காக கடல் கடந்து வேலை செய்யும் ஒருவன், தன் சுகத்திற்காக அவனுக்கு அநீதி இழைக்கும் உறவுகள் என இப்படி அநேக தவறுகள் நம்மில் கொட்டிக்கிடக்கிறது. கணக்கில் அடங்கிட முடியாத அவற்றிற்கு நல்ல தவறு கெட்டதவறு என்று அளவுகோல் கொடுத்து தரம் பிரிக்கிறார்கள்.