ஏக்நாத்தின் 'ஆங்காரம்'.. ஒரு வாசிப்பனுபவம்!
-வி கே சுந்தர்
சற்று தாமதமாகிவிட்டது என்று தொடங்கினால் ‘அடி செருப்பால' நிகழ்ச்சி முடிஞ்சு முழுசா ஒரு நாள் ஆச்சு ,பேச்சப் பாரு !? என்று நீங்கள் முழுவதும் வாசித்தபின் கோபப்படக் கூடும் என்பதால் நானே சரண்டர்!
நண்பன் ஏக்நாத் எழுதிய ‘கெடைக்காடு' நாவலை பிரசுரத்துக்கு முன்பே வாசிக்கும் வாய்ப்பு எனக்கு வாய்த்தது! அவரது ‘ஆடுமாடு' பிளாக்கில் தொடர்ந்து வாசிக்கும் காலங்களில் ‘ஜி ..மண் சார்ந்த மனிதர்கள் மீதான உங்களது பார்வை நுட்பமா இருக்கு ,நாவலா எழுதுங்களேன் என்பேன்.அவர் மீது அன்புகொண்ட அத்தனைபேரும் இதையே சொல்லியிருக்கக் கூடும் என்பதை நானறிவேன்.கெடைக்காடு வாசித்து முடித்த அந்த தருணத்தில் குள்ராட்டி மலையின் குளிரையும் உச்சி மாகாளி பற்றியும் எனது அன்றைய பதிவில் எழுதியிருக்கிறேன்.
நாவல் வெளிவந்துவிட்டது. அண்ணன் எஸ்.ரா அதுபற்றி சிலாகித்து எழுதுகிறார். இன்னபிற நட்புகளும் அந்த நாவல் குறித்தும் ஏக்நாத்தின் எழுத்து பற்றியும் வெவ்வேறு தளங்களில் பதிவு செய்யப் படுகிறது. ஒரு சினிமா பத்திரிகையாளன், பாடலாசிரியர் என்பதைத் தாண்டி எழுத்தாளனாக ஏக்நாத்தை இந்த சமூகம் ஏற்றுக்கொண்டதற்கு நண்பர்களாகிய நீங்கள்தான் என்பதை நான் இந்த இடத்தில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
‘ஆங்காரம்' நாவல் தயாராகி சந்தைக்கு எனக்கு ஒரு பிரதி கொடுத்தார் நண்பர் ஏக்நாத். வாசிக்கத் தொடங்கி சில பக்கங்கள் கடக்கும்போதே நானே ‘உப்பிடாதி'யாக உரு மாறுகிறேன்! கருத்த முண்டு மயினி (எங்கள் ஊரில் மதினி) ‘கொழுந்தனாருக்கு வெக்கத்தப் பாரு ‘ என்று நான் கேட்ட வார்த்தைகளும் வாழ்க்கையாகவும் கதை பயணிக்கிறது. முல்லை பெரியாற்றில் நான் குளிக்கும்போது... மழையில் நனைத்தபடி நான் உணர்ந்த தட்ப ‘வெட்ப'நிலை முப்பிடாதிக்கும் நடக்கிறது. என் மூதாதையர்களிடமும் ‘பிடிமண்' சண்டை நடந்திருக்கிறது. ஆங்காரம் படிக்கும்போது உங்களுக்கும் இதுபோல் ‘முப்பிடாதி'யோடு கைகோர்த்துக்கொள்ள வரிசைகட்டி நிற்கிறது அடுத்தடுத்து வரும் சம்பவங்களும் வாழ்கையும்...
இந்த நாவலை முழுவதுமாக வாசித்து முடிக்க முடியாத வாழ்க்கை சூழல்!கிட்டத்தட்ட கிளைமாக்ஸ் வந்துவிட்டேன். பொழப்புக்காக வெளியூர் அல்லது வெளிநாட்டில் வாழ்கிற எல்லோருக்கும் பணம் தேடி பிணமாக அலைகிற வாழ்க்கைதான். சொந்த ஊருக்குப் போய் செட்டிலாகிடனும் என்கிற ஆசை இருக்கும். இந்தக் கொடைக்காவது ஊருக்குப் போகணும் என்று ஆசையிருக்கும். ஒருபோதும் அதைச் சாத்தியமாக்காது இந்த வாழ்க்கை. உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும்தான் இந்த ‘ஆங்காரம்'!
தொடங்கிய இடத்துக்கு இப்போது வருகிறேன்.'கெடைக்காடு'வாசித்து முடித்த பின் ஏக்நாத்திடம் ஒரு வாக்குறுதி கொடுத்திருந்தேன். என் செலவில் ஒரு வாசிப்பு அனுபவக் கூட்டம் நடத்துகிறேன் என்று! காலம் அதற்க்கான சூழலை எனக்கு கொடுக்கவில்லை!
நேற்று நடந்த ‘டீக்கடை சிந்தனையாளர் பேரவை'க் கூட்டம் அதை நிறைவாகச் செய்து முடித்தது.
முதல் கூட்டம் என்பதால் நேற்று நாலரை மணியிலிருந்தே நண்பன் பதட்டமாக இருந்தார்! சிறப்பாக நடந்து முடிந்ததுக்கு அண்ணன் கவிதா பாரதிக்கும் கலந்து கொண்டு சிறப்பித்த அத்தனை அண்ணன்களுக்கும் நட்புகளுக்கும் ‘நன்றி' என்கிற ஒற்றைச் சொல் ஈடாகாது.
லவ் யூ!