அம்மா என்றாலே ஆனந்தம்தான்..!
சென்னை: அம்மா என்றாலே ஆனந்தம் தாங்க. பிள்ளை உண்டான நாள் முதல் அப்பிள்ளையின் வரவுக்காகக் காத்திருந்து பத்து மாதம் கருவறையில் சுமந்து தன் உயிரையும் துச்சமென எண்ணி பிள்ளையின் உயிரைக் காப்பாற்றப் போராடும் போராளிகள் அவர்கள். தாய்மை குணத்தால் நம்மைத் தாலாட்டும் அன்னையை இந்த அன்னையர் தினத்தில் போற்ற விரும்புகிறேன்.
எந்த ஒரு கவலை என்றாலும் மகிழ்ச்சியென்றாலும் அம்மாகிட்ட தான் பகிர்ந்துக்குவோம். நானும் அப்படிதாங்க. எங்க அப்பா பள்ளி ஆசிரியர். வீட்டில் அம்மா தான் எல்லாம். அவர் பள்ளி முடிந்து வந்தவுடன் வயலுக்குப் போய்டுவாரு. அதனால எப்பவுமே நானும் என் தம்பியும் அம்மா கூடத்தான் இருப்போம். இன்னிக்கு மிக்ஸி கிரைண்டர் இருக்கும்போதே நம்மால வேலை செய்ய முடியல ஆனா எங்கம்மா அம்மியிலும் கல் உரலையும் தான் பன்படுத்துவாங்க. இது தவிர நான்கு மாடுகள் வேற.
காலையில் ஐந்து மணிக்கு எழுந்து வாசல் தெளித்து கோலமிட்டு பால் கறந்து காபி போட்டு உணவு தயார் செய்து எங்களையும் பள்ளிகளுக்கு அனுப்பி மாடுகளைச் சுத்தம் செய்து மறுபடியும் சாயங்காலம் எங்களைப் படிக்க வைச்சு அப்பப்பா. இதையெல்லாம் சர்வசாதாரணமாக செஞ்சிடுவாங்க எங்கம்மா.
நான் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் போது நாங்க டவுனுக்கு வந்துட்டோம். அப்போ தான் எங்கம்மா வேலைக்குப் போக ஆரம்பிச்சாங்க. காலையில் வீட்டு வேலை அப்புறம் பள்ளியில் வேலை மறுபடியும் வீட்டில் டியூஷன் எங்களுடைய படிப்பு இரட்டைக் குதிரைப் போல் எல்லாவற்றையும் சமாளித்தார்.
Mother's day: ஆராரிராரோ.. நீங்க அம்மா செல்லமா.. சொல்லுங்கள் எங்களிடமும்!
பண்டிகைக்காலம் என்றால் வீடே களைகட்டும். வீடு முழுவதும் வண்ணக்கோலமிட்டு விதவிதமாக உணவு சமைப்பார்.நாங்கள் எல்லாம் கிச்சனுக்கு வெளியே நிற்பதோடு சரி. அவருக்குப் பொய் சொன்னால் பிடிக்காது. எல்லாப் போட்டிகளிலும் கலந்துக் கொள்ள வேண்டும் என நினைப்பார். நன்றாகப் படிக்க வேண்டும் இல்லையெனில் அடி தான். எந்தத் தவறு செய்தாலும் எளிதில் கண்டுபிடித்துவிடுவார்.
அவர் ஒரு மிகச் சிறந்த போராளி. அப்பாவிற்குத் துணையாக வேலைக்குச் சென்றார் சொந்த வீடு கட்ட உதவினார். நாங்கள் சோர்ந்திருக்கும் போதெல்லாம் அவர் தான் எனர்ஜி. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் பெற்றோர் என் அம்மாவைத் திருமணம் செய்துக் கொடுத்தனர். ஆனால் படிப்பின் மீது அம்மாவிற்குத் தீரா காதல். அப்பாவும் படிக்க வைத்தார். இன்று என் அன்னை வரலாறு பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். படிப்பு ஒன்றே நம் வாழ்க்கையை வளமாக்கும் என்று அடிக்கடிக் கூறுவார்.
இன்றுவரை ஏழை மாணவிகளுக்கு ஒரு பைசா கூட வாங்காமல் டியூஷன் எடுக்கிறார் என் அன்னை. திருமணம் ஆன பின் அம்மாவின் வலியை என்னால் உணர முடிந்தது. ஆனால் ஜூரம் வந்தாலும் அவர் படுத்து நாங்கள் பார்த்ததில்லை. உறவுகள் உதவிக்கேட்டால் மறுப்பின்றி செய்வார். எனக்கும் என் தம்பிக்கும் எல்லாமே அம்மா தான்.
எனக்கு இன்று இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இன்று நானும் ஒரு அன்னை. அன்னையின் கஷ்டங்கள் என்னவென்பதை அறிகிறேன். நிச்சயம் நீ கிரேட் அம்மா. அப்பா இறந்தபின் இன்றும் எங்களுடைய தன்னம்பிக்கை அன்னை மட்டுமே. சின்ன வயசிலேர்ந்தே எல்லா விஷயங்களையும் அம்மாவிடம் சொல்லுவேன்.
அவங்க எனக்கு நல்ல தோழியும் கூட. நானும் இன்னிக்கு அவங்கள மாதிரி தான் என் பொண்ணுக்கு இருக்கணும்னு விரும்புகிறேன். அனைத்துத் தாய்மார்களுக்கும் என் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.